முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 70 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார் வைகைச் செல்வன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்ட செங்கோட்டையன் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு இன்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பதிவில்,மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
