சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். EPS moves resolution speaker
சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் சட்டமன்றத்திற்குள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக செங்கோட்டையனுடன் சட்டமன்றத்திற்குள் சமாதான பேச்சுவார்த்தை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், “எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றால் பேரவை விதிப்படி 35 சட்டமன்ற உறுப்பினர்கள் இசைவு வழங்க வேண்டும். எனவே இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிப்பவர்கள் எழுந்து நிற்கலாம்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன், சமீப காலமாக அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையன் உள்ளிட்ட 66 சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்றனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தனது இருக்கையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை நடத்தி வருகிறார். EPS moves resolution speaker