அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 25) மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சார பயணத்தை மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
தற்போது வரை அவர் 170க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் உள்ள நிலையில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. பின்னர் தேவர் குருபூஜை நாளில் அதிமுகவில் இருந்து விலகிய ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்தார். குரு பூஜையில் பங்கேற்ற பின்னர் சசிகலாவையும் சந்தித்து பேசினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
வரும் நவம்பர் 30ம் தேதி கோபிசெட்டி பாளையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், 10-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிய சூழலில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
