xமாநாடு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன்

Published On:

| By Balaji

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தைவிடவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

சினிமா விமர்சகர்கள் தங்களுடைய விமர்சனத்தில் யுவன் சங்கர் ராஜாவைத் தனியே குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே..!

இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும் அதே நேரம், எனது கனிந்த இதயத்துடன் ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானது. மிகவும் சிறப்பு மிகுந்த படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன. ஆனால், எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை.

ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பிஜிஎம்மில் எனது புதிய முயற்சிகளைக் கூர்மையாகக் கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி.

எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்தத் திரைப்படத்துக்காகத் தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவரது உழைப்பிற்கும், முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். இந்த ‘மாநாடு’ படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். “நீங்கள் உண்மையாகத் தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும்” என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. இதை உண்மையாக்கும் விதமாக இந்த ‘மாநாடு’ திரைப்படத்தின், ஒட்டுமொத்தக் குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும், பாராட்டுகளும் கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share