ஒரு மொழியில் ஹிட்டாகும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆகும். அப்படி ரீமேக்காகும் எல்லா படங்களும் வெற்றியைக் கொடுத்துவிடாது. நேட்டிவிட்டி சார்ந்த சில படங்களை எந்த மொழியில் ரீமேக் செய்தாலும் வேலைக்காகாது.
சமீபத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பிரைம் வீடியோவில் வெளியான படம் ‘மாறா’. இந்தப் படம், துல்கர் சல்மான் – பார்வதி நடித்த ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் சார்லி மிகப்பெரிய ஹிட். அதோடு, கேரள மாநில அரசின் எட்டு விருதுகளைப் பெற்றது. மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்புப் பெற்ற படமே, தமிழில் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற படமொன்று, தமிழில் உருவாக இருக்கிறது. கடந்த 2019இல் சுராஜ் மற்றும் செளபின் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ . இந்தப் படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கிராமத்து சூழலில் வாழும் தந்தையான சுராஜுக்கு வீட்டு உதவிக்காக, ரோபோ ஒன்றை அனுப்பிவைக்கிறார் ஜப்பானில் பணியாற்றும் மகன் செளபின். விஞ்ஞானத்துக்கும் பாசத்துக்கும் நடுவிலான மெல்லிய கதையாக அட்டகாசமாக உருவாகியிருக்கும் திரைக்கதை.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் முன்னரே கைப்பற்றியிருந்தார். நீண்ட நாளாக இந்தப் படத்தைத் தொடங்குவதற்கான சரியான தருணத்துக்குக் காத்திருந்தார். இப்போது, கொரோனா சிக்கலில் இருந்து அனைத்தும் கட்டுப்பாட்டுக்கு வந்திருப்பதால், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ பட ரீமேக் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தை இவர் இயக்கப் போவதில்லையாம். அதற்குப் பதில், படத் தயாரிப்பு பணிகளை கையில் எடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அதோடு, இந்தப் படத்துக்கு இரண்டு இயக்குநர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளரான சபரி மற்றும் சரவணன் இருவருமே இயக்குகிறார்கள். இதில், கே.எஸ்.ரவிகுமாரின் சகோதரரின் மகன்தான் சபரி.
மற்றுமொரு முக்கிய தகவல் என்னவென்றால், மலையாளத்தில் சுராஜ் நடித்த தந்தை ரோலில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். மகனாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கிறார். அதோடு, யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் தகவல்.
மலையாளத்தில் பிஜிபால் இசையமைத்திருப்பார். தமிழில் ஜிப்ரான் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சார்லி படம் போலவே, ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ படமும் கேரள மாநில அரசின் மூன்று விருதுகளை பெற்றப் படம். குறிப்பாக, சிறந்த நடிகருக்கான விருதை சுராஜ் பெற்றார். மாறாவில் நடந்த தவற்றைச் செய்யாமல் இருப்பாரா கே.எஸ்.ரவிகுமார்… தமிழிலும் சிறந்த நடிகருக்கான விருது கே.எஸ்.ரவிகுமாருக்குக் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
**ஆதினி**
�,”