டேட்டா தான் ஆயில்: டெக்னாலஜி துறை பட்ஜெட்டில் நிர்மலா

Published On:

| By Balaji

2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் வளர்ச்சிக்காக, பாரத் நெட் திட்டத்துக்கு 6000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பாகமாக இயங்கிவந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் [79 ஆயிரம் ஊழியர்களைச் சமீபத்தில் தான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளச் சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/01/121/bsnl-employees-getting-voluantry-retirement). பணியிலிருந்த ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளச் சொல்லிவிட்டு, பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஃபைபர் கனெக்‌ஷன் மூலம் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைக்கவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே எலெக்ட்ரானிக் பொருட்களை உருவாக்குவதற்கு ஏற்ப தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக டெக் நிறுவனங்கள் புலம்பி வருகின்றன. “இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதை முடுக்கிவிடும் விதத்தில் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் இல்லை” என நாஸ்காம் (தொழில்நுட்பச் சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களின் தேசியக் கூட்டமைப்பு) குறிப்பிட்டுள்ளது.

தேசியத் திட்டமாக ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’ செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த 8000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான இடத்தில் டேட்டா சென்டர்களை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் Dividend Distribution Tax நீக்கப்பட்டிருப்பதால், இதன்மூலம் அரசுக்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டி வந்த 15% வரி மீதமாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் முழுவதும், ‘டேட்டா தான் அடுத்த ஆயில்’ என்பதைக் குறிப்பதாகவே இருந்தது. இதைப் பேசும்போது சொல்லியும் விட்டார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய பல திட்டங்களை அரசு கொண்டுவரும் என்றும் அதைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். படித்து முடித்த பொறியியல் மாணவர்கள் தொழிற்சாலைகளில் ஒரு வருடம் வரை இன்டர்ன்ஷிப்பாகப் பணியாற்றி தொழிலைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel