தன்னை நடிகர் சங்கத் தேர்தல் போட்டியில் இருந்து நடிகர் சிரஞ்சீவி விலகச் சொன்னதாக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பிரகாஷ் ராஜ் 110 வாக்குகள் வித்தியாசத்தில் மிக இளம் நடிகரான விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, கன்னடத்துக்காரர், வெளியிலிருந்து வந்தவர், சங்கத் தேர்தலில் நாம் தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே பிரகாஷ் ராஜின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே, தன்னை ஓர் அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி மா சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரகாஷ் ராஜ்
இந்த நிலையில் சங்கத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணு மஞ்சு பேசும்போது, “இந்தத் தேர்தலின் தொடக்கத்தில் நாம் அனைவரும் ஏகமனதாக பிரகாஷ் ராஜைத் தேர்ந்தெடுப்போம்” என்று சொல்லி என்னைத் தேர்தலில் இருந்து விலகச் சொன்னார் நடிகர் சிரஞ்சீவி. ஆனால், எனக்கும் என் அப்பாவுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதால் நாங்கள் விலகவில்லை.
பிரகாஷ் ராஜ் தனது தோல்விக்கு காரணம், தன்னை எல்லோரும் வெளியிலிருந்து வந்த அந்நியராகப் பாவித்ததே என்று கூறினார். ஆனால், அவருக்கு வாக்களித்த 274 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே. எனவே, பிரகாஷ் ராஜ் அப்படி நினைப்பது தவறு. சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பிரகாஷ் ராஜுக்குத்தான் ஆதரவு தந்தனர். அதனால் ராம் சரண் கண்டிப்பாக அவருக்குத்தான் வாக்களித்திருப்பார்
தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதெல்லாம் கடந்த காலம். அது முடிந்துவிட்டது. எனக்கு பிரகாஷ் ராஜைப் பிடிக்கும். இனி சங்கத்தின் தேர்தல்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் போட்டியிட முடியாதவாறு புது விதிகளை நாங்கள் கொண்டு வரப் போவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை. கொண்டு வரப் போவதும் இல்லை.
மோகன் பாபுவின் மகனுக்கு வாக்களிப்போம் என்று எல்லோரும் நினைத்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்” என்று பேசினார்.
இதற்கிடையே தேர்தல் தோல்விக்குப் பிறகு, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி மா அமைப்பிலிருந்து ராஜினாமா செய்தார் பிரகாஷ் ராஜ். அவரைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற 11 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ் தனது அணியினருடன் இணைந்து புதிய சங்கமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாகவே சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், என் பக்கம் நின்ற என் அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களே. எனது ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது.
நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் பொறுப்பு என்பதை எங்கள் அணி உணர்ந்துள்ளது. உங்களை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம். எங்களை நினைத்து நீங்கள் பெருமையடைவீர்கள்” என்று பிரகாஷ் ராஜ் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
**அம்பலவாணன்**
�,”