ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன் – விராட் கோலி

Published On:

| By Balaji

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு கேட்கவே இல்லை. ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில், விராட் கோலி ஓய்வு கேட்டதைத் தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின. மேலும், பல்வேறு வதந்திகள் பரவின.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். ‘நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் பேசியிருந்தேன். ஆனால், டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தலைமை அணி தேர்வாளர் அழைத்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக கூறினார்.

அதற்கு முன் என்னிடம் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவே இல்லை. கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரோகித் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர்.

நான் இப்போதும் இந்திய அணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share