விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்றானது சமீபத்தில் வெளியானது. என்னவென்றால், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்க விக்ரம் பிரபு நடிக்கும் படமான ‘டாணாக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
யார் இந்த தமிழ் தெரியுமா? வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்தில், காட்டுக்குள் இறங்கிவிடும் தனுஷையும், கென் கருணாஸையும் வேட்டையாட களமிறக்கப்படும் வில்லன் தான் கரியன். இந்த கரியன் ரோலில் நடித்தவர் தமிழ். வெற்றிமாறனிடம் பணியாற்றிவந்தவர். இவர் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். கமர்ஷியல் போலீஸ் சினிமாப் படம் என்கிறார்கள்.
டாணாக்காரன் படத்துக்கு விக்ரம் பிரபு ஒப்புக் கொண்டதையே ஆச்சரியமானத் தகவலாகத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். பொதுவாக விக்ரம் பிரபு நடிக்கும் படங்களுக்குக் குறைந்தது 1 கோடி வாங்கிவிடுவார். அதை விடக் குறைவாக யார் சம்பளம் பேசினாலும் கெட் அவுட் தான். வாரிசு நடிகரென்பதால் இந்த கிடுக்குப் பிடி இருக்கும். விக்ரம் பிரபு நடிக்க வேண்டுமென்றால் தாத்தா சிவாஜி, தந்தை பிரபு என இரண்டு பெரிய நடிகர்களின் பின்புலத்தையும் சேர்த்தே சம்பளம் பேசுவார்கள். சிவாஜி, பிரபு என கெளரவமிக்க குடும்பத்திலிருந்து நடிப்பதால், அது ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் தான் இந்த விலை.
இப்படியிருக்கையில், டாணாக்காரன் படத்துக்கு விக்ரமின் சம்பளம் 30 லட்சம் தான் என்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. என்னவென்றால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ’டாணாக்காரன்’ படத்தை முறையான விளம்பரங்களுடன், சொன்ன தேதியில் வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார். அதற்காக தான், 30 லட்சத்துக்கு ஒப்புக் கொண்டாராம் விக்ரம் பிரபு.
ஏனெனில், விக்ரம்பிரபுவின் படங்கள் எக்கச்சக்கமாக தாமதமாகியே வெளியாகியிருக்கிறது. அப்படி வெளியானாலும் முறையான விளம்பரமோ, சரியான திரையரங்குகளோ கிடைக்காமல் வந்ததும் போனதும் தெரியாமல் போய்விடும். அப்படி எதுவும் நடக்காமல் சொன்னபடி பிரம்மாண்டமாக வெளியிடுவோம் என பேசியிருக்கிறார்கள் தயாரிப்புத் தரப்பினர். அதனாலேயே, இவ்வளவு பெரிய சம்பளக் குறைப்புடன் விக்ரம் நடிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.
இப்போதைக்கு விக்ரம்பிரபு நடிப்பில் பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் கைவசம் படமாகிவருகிறது. இந்த வருடத்தின் முதல் விக்கெட்டாக சன் டிவியில் நேரடியாக ‘புலிக்குத்தி பாண்டி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
– தீரன்
�,