சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக சினிமா நடிகர்களின் ரசிகப் பட்டாளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தங்களது அபிமான நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாகப் பேசுவதும், குரல் கொடுப்பதும், எதிர்ப்பவர்களைத் திட்டுவதுமான ரசிகர்களின் வரம்பு மீறிய செயல்கள் அதிகரித்து வருகின்றன
சமீப ஆண்டுகளில் இந்த இணையச் சண்டையில் முனைப்பாக இருப்பது நடிகர்கள் அஜித்குமார் – விஜய் ரசிகர்கள்தான். இரு தரப்பு ரசிகர்களுமே தங்களது அபிமான நடிகர்தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்பதை நிறுவுவதற்காக ஒருவர் மேல் ஒருவர் அவதூறு சொற்களை வீசி வருகிறார்கள்.
தற்போது அஜித்குமார் ரசிகர்கள் செய்த ஒரு கலாட்டாவினால் விஜய் ரசிகர்களும் களத்தில் குதிக்க. ட்வீட்டர் தளம் திக்குமுக்காடிப் போயிருக்கிறது.
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகை பேட்டியொன்றில், தன் மகன் தன்னைப் புறக்கணிப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
இதைக் கண்ட அஜித்குமார் ரசிகர்கள் உடனடியாக டிவிட்டரில் #பெத்தவர்கிட்ட பேசுங்க_விஜய் என்ற ஹேஸ்டேக்கை துவக்கி விஜய்க்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அறிவுரைக்குள் நடுநடுவே விஜய்யை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்திருக்கிறார்கள்.
இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்களும் பதில் கூற களத்தில் குதித்தனர். #வாழவிடுங்க_அஜித் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள் இதைப் பயன்படுத்தி அஜித் தமிழகத்து தயாரிப்பாளர்களைப் புறக்கணிப்பதையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கும் உதவி செய்ய மறுப்பதையும், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதையும் சொல்லிக் காட்டி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது இந்திய டிரெண்டிங்கில் இந்த இரண்டு ஹேஸ்டேக்குகள்தான் தெறிக்க விடுகின்றன. சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ரசிகர்களின் மனப்பான்மையையும் தாண்டி அடுத்த நடிகரின் ரசிகனை பேசவே விடக் கூடாது எனும் மனோபாவத்துக்கும் இட்டுச் செல்கிறது. ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நடிகர்கள் விழித்துக்கொள்வது நல்லது.
**-இராமானுஜம்**
�,