விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தும் வருகிறது மாஸ்டர். விஜய்க்கான படமென்றாலும், விஜய்சேதுபதிக்கும் சினிமா கேரியரில் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மாஸ்டர்.
தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வருடம் அதிக ரிலீஸூம் விஜய்சேதுபதிக்கு தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல், வில்லன், பிற மொழிப் படங்கள் என சுறுசுறுப்பாக நடித்துவருகிறார்.
விஜய்சேதுபதி கைவசம் ரிலீஸூக்கு ரெடியாக சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ படங்களும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’, யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளர் தர்பார் படங்களும் தயாராகிவருகிறது. அதோடு, அனெபல் சுப்ரமணியம், காத்துவாக்குல ரெண்டு காதல் , `கடைசி விவசாயி’, `கொரோனா குமார்’ மற்றும் மகிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி பிறந்த தினத்தன்று, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன விஷயமென்றால், இந்தப் படத்தின் போஸ்டரில் இலங்கை நாட்டின் தேசியக் கொடி இடம்பெற்றிருப்பதால் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் விஜய்சேதுபதி. எப்படி, இலங்கை கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் நடிக்கலாம் என பலரும் சர்ச்சையை ஏற்படுத்த, அந்தப் படத்தில் இருந்து விலகினார் சேதுபதி. அதோடு, அந்தப் படமே கைவிடப்பட்டது.
கடந்த வாரங்களில் விஜய்சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் பார்த்திபனின் கதாபாத்திரம் சீமானை பிரதிபலிப்பதாக இருப்பதாக ‘நாம் தமிழர்’ தம்பிகள் கெளம்பிவந்தார்கள். அதன்பிறகு, நேரடியாக சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகே அந்த சர்ச்சை அடங்கியது.
இதைத்தொடர்ந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்தப் படத்தின் கதையே சுவாரஸ்யமான ஒன்று. ஈழத்தமிழராக விஜய்சேதுபதி நடிக்கிறாராம். இலங்கையிலிருந்து இந்தியா தப்பித்துவரும் ஈழத்தமிழரான சேதுபதி, இங்கிருந்து லண்டன் சென்றாரா, இல்லையா என்பதே கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. படம் முழுவதும் ஈழ அரசியலைப் பேசியிருக்கிறாராம். அதோடு, இந்தப் படம் வெளியானால், இப்போது சர்ச்சையைக் கிளப்பியவர்களே, ஆதரவு அளிப்பார்கள் என்று கூறுகிறார்கள் படக்குழுவினர்கள்.
இந்தப் படத்தினை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கானத் தீவிரப் பணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதினி**�,