நடிகர் விஜய்க்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரியில் விலக்கு கோரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
“நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல. கட்டாயப் பங்களிப்பு” என்று கடுமையாகச் சாடிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரண்டு வார காலத்துக்குள் நுழைவு வரியினை விஜய் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார் விஜய். ஆனால், எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால் விஜய்யின் மேல் முறையீடு மனுவானது விசாரணைக்காக பட்டியலுக்குள் வரவில்லை.
தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை விசாரணை பட்டியலுக்குள் கொண்டுவர பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் மேற்கொள்ளப்பட்டது.
தீர்ப்பு நகலின்றி மேல்முறையீட்டுக்கான மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனும் விஜய்யின் கோரிக்கையை ஏற்றுள்ளார்கள் நீதிபதிகள். விஜய்யின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், மேல்முறையீடு மீதான பிரதான மனுவின் வழக்கானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் விஜய்க்கு வெளியானது. தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**
�,