வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி : கைகூடியது எப்படி?

Published On:

| By Balaji

இயக்குநர் வெற்றிமாறனுக்கு விஜய்சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது ஆசை. அதுபோல, விஜய்சேதுபதிக்கு வெற்றிமாறன் படத்தில் ஒரு கேரக்டராவது செய்துவிட வேண்டுமென்பது விருப்பம். அந்த ஆசை நிறைவேறாமலேயே இருந்துவந்தது.

வட சென்னை படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்சேதுபதி. ஆனால், விஜய்சேதுபதி வரும் நாட்களில் தனுஷ் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தார். ஏனெனில், நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதிக்கு, தனுஷுக்கும் நடுவே கருத்து வேறுபாடு இருந்தது. அதனால், கடுப்பான விஜய்சேதுபதி வடசென்னையில் இருந்து விலகினார். இப்படியாக, வெற்றிமாறன் – விஜய்சேதுபதி கூட்டணி நடக்கவே இல்லை. ஆனால், மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு கைகூடியிருக்கிறது.

தற்பொழுது, சூரி நாயகனாக நடிக்க ஒருபடத்தை இயக்கும் பணிகளில் இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தில் சூரிக்கு இணையான ரோலில் இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருந்தார். சத்தியமங்கலம் காடுகளில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தது படக்குழு. ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை மையமாகக் கொண்டே இந்தப் படம் உருவாக இருந்தது. படத்துக்கான பிரம்மாண்ட செட் பணிகள் சத்தியமங்கலம் காடுகளில் நடந்துவருகிறது. ஆனால், கடும் குளிர் காரணமாகப் படத்திலிருந்து விலகினார் பாரதிராஜா.

பாரதிராஜாவுக்குப் பதிலாக நடிகர் கிஷோரை ஒப்பந்தம் செய்ய இருந்தார்கள். கிஷோரும் செட்டாகாததால், விஜய்சேதுபதியிடம் கடந்த ஒருவாரமாக பேசிவருகிறார் வெற்றிமாறன். அதன்படி, வயதான கெட்டப்பில் விஜய்சேதுபதிக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. கேரக்டருக்கு விஜய்சேதுபதி செட்டானால், வெற்றிமாறன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியாகிவிடும்.

வெற்றிமாறனே இயக்கி, தயாரித்துவரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்துக்கானப் பாடல்களை ஏற்கெனவே இளையராஜா முடித்துக் கொடுத்துவிட்டார். அதோடு, ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. சமீபத்தில் தேதியை அட்ஜெஸ்ட் செய்துதான், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார். அதுமாதிரி, வெற்றிமாறன் படத்துக்கும் சில படங்களை பின் தள்ளிவிட்டு முன்னுரிமை கொடுப்பார் என்றே சொல்கிறார்கள். ரசிகர்கள் விருப்பப்படி, இறுதியாக வெற்றிமாறன் – விஜய்சேதுபதி கூட்டணி கைகூடப் போகிறது.

சந்தேகம் என்னவென்றால், படத்தில் ஹீரோ சூரி தான். இப்போது, விஜய்சேதுபதி இணைந்தால் படத்தின் ரேஞ்ச் வேற இடத்துக்கு சென்றுவிடும். இறுதியாக, யார் ஹீரோ என்ற குழப்பம் வருமா என்று தெரியவில்லை!

**ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share