�
சீரியலில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் கோமா நிலைக்குச் சென்றிருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் சீரியலுக்குள் இயக்குநர் பாலசந்தர் வந்தார். அப்போது, அவரின் காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் வேணு அரவிந்த். அதுமட்டுமின்றி, ராதிகாவின் செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பொதுவாக, சீரியலில் மெயின் லீட் கேரக்டர்களில் இவரும் இருப்பார்.
நடிகர் வேணு அரவிந்த் கொரோனாவினால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு நிமோனியா அட்டாக் வந்திருக்கிறது. அதன்பிறகு நலமுடன் இருந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரின் மூளையில் கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளது. அதன்விளைவாக உடல் ஒத்துழைக்காததால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள்.
இந்தத் தகவல் சின்னத்திரையுலகையும், திரை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்பொழுது, சென்னையின் பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருக்கிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியறிந்த பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டுவருகிறார்கள். விரைவில், நலமுடன் வீடு திரும்புங்கள் வேணு!
**-ஆதினி**
�,