சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிகப் பெரிய ஊடகமாகும். அதை வைத்துக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும்… நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சில படங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில், கமர்ஷியலாக உருவாகியிருந்தாலும், சமூக அவலங்களை பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘வா பகண்டையா’.
அறிமுக இயக்குநர் ப.ஜெயகுமார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, தனது ஒளி ரெவல்யூசன் நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்.
ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ப.ஜெயக்குமார் பேசுகையில், “வா பகண்டையா’ என்பது ஒரு கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமம்தான் கதைக்களம் என்பதால் படத்தின் தலைப்பாக அந்த பெயரையே வைத்துவிட்டேன்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களைத்தான் இப்படம் பேசுகிறது என்றாலும், காதல், காமெடி, நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுது போக்கு படமாக இருக்கும்.
இன்று சாதியை மையப்படுத்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு தரப்பினர் தாங்கள் அனுபவித்த இன்னல்களை சொல்லி படம் எடுக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்ற போடப்பட்ட, வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறார்கள்.
இதன் மூலம் சாதி பாகுபாடே இல்லாத ஒரு இடமாக இருந்த சினிமாவில் சாதி பிரிவினையை உருவாக்கிய இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும். இவர்களின் கருத்துக்களை மக்கள் மனதில் இருந்து அழிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அந்த கருத்தை அழுத்தமாக படத்தில் பேசியிருக்கிறோம்.
சாதியை பற்றி மட்டும் நான் பேசவில்லை. இந்து கடவுள்களால்தான் சாதி பிரிவினை உருவானது என்ற பொய்யான குற்றச்சாட்டை உடைத்தெரிந்திருக்கிறேன். இங்கு சாதியை காட்டி இந்துக்களை மதம் மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
இங்கு மாற வேண்டியது மதம் அல்ல. மக்கள்தான். மக்களின் மனங்களில் இருக்கும் சாதி உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை அல்ல.
நம் இந்து மதம் மிகவும் புனிதமானது. ஆனால், அதை சிலர் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருப்பதோடு, மக்கள் மனதில் பல தவறான கருத்துக்களை விதைக்கிறார்கள். அவர்களுக்கு என் படம் சவுக்கடி கொடுப்பது உறுதி.
வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம் என்று சொல்லும் கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதே சமயம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் சில அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது. அதனால், அந்த சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட அந்த சட்டத்தைக் கொண்டு, உயர் சாதி என்று சொல்லக் கூடிய சில அப்பாவிகளை, பலர் பழி வாங்குவது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க வேண்டும், என்று என் படம் வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டும் அல்ல, இன்று பலர் எதிர்க்கும் குடியுரிமை திருத்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான கருத்துக்களை மக்கள் மனதில் பலர் பரப்புகிறார்கள். ஆனால், அந்த சட்டங்களால் இஸ்லாமியர்களுக்கும், நம் நாட்டுக்கும் எத்தகைய பாதுகாப்பு கிடைக்கிறது என்பதை மிக தெளிவாக பேசியிருக்கிறேன்.
பிரதமர் மோடி மற்றும் அவர் கொண்டு வரும் திட்டங்களை தமிழகத்தில் தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதை தவறாகவும் சித்தரித்து வருகிறார்கள். ஆனால், என் படம் வெளியான பிறகு பிரதமர் மோடியையும், அவருடைய திட்டத்தையும் தமிழக மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த படம் பா.ஜ.க-வுக்கு ஆதரவான அல்லது அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் படம் இல்லை. மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். அவர்களை முட்டாளாக்கும் சிலரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்கான விஷயங்களை மட்டுமே படத்தில் பேசியிருக்கிறோம். இப்போது எதையும் விரிவாக சொல்ல முடியாது. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், தனிமனித பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தீண்டாமை உருவாகிறது, என்பதை பற்றி படம் பேசும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மட்டும் அல்ல.. உயர் சாதியில் இருந்தால்கூட, இங்கு பெண்களை ஒருவித அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். அப்படி இருக்க கூடாது, என்று படம் குரல் கொடுக்கும். மொத்தத்தில், ‘வா பகண்டையா’ சமூகத்திற்கான ஒரு படம்.
இந்தப் படத்திற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என் படம் ஓடவில்லை என்றால்கூட நான் கவலைப்பட மாட்டேன்.
காரணம் நான் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. மக்களை நல்வழிப்படுத்தவும், என் இந்து சமயத்தை காப்பாற்றவும்தான் படம் எடுக்கிறேன். அதை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன். இதற்கு தடையாக வருபவர்களை நிச்சயம் எதிர்த்து நிற்பேன்.
அதே சமயம், எனக்கு ஆதரவு கொடுப்பவர்களை பின்னால் வைத்துக் கொண்டு என் படத்தை வியாபாரம் செய்யும் வேலையை என்றும் செய்ய மாட்டேன். மொத்தத்தில் நான் மக்களுக்காக படம் எடுக்கிறேன். இது என் படம் என்பதைவிட, மக்கள் படம் என்றுதான் சொல்வேன்” என்றார்
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘வா பகண்டையா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
**அம்பலவாணன்**
�,