மதுவுக்கு இல்ல, மாலுக்கு இருக்கா?: அப்டேட் குமாரு

entertainment

‘ஆஃபீஸ்ல பாதிபேரு லீவு போட்டிருக்காங்க. கடைத் தெருவில, ரோட்ல கூட கூட்டத்தையே காணோம். ஒரு வைரஸ் எப்பிடி உலகத்தையே உலுக்கிருச்சு பாத்தீங்களா’னு ரொம்ப சோகமா உக்காந்து பேசிட்டு இருந்தேன். அதக் கேட்டு, ‘ஆமா தம்பி, நானும் கடைக்கு லீவு குடுத்திட்டு நாலு நாள் வீட்டில ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்’னு டீக்கடை அண்ணா சொல்றாங்க. ‘அப்போ கடை? காசு?’ன்னு நான் கேட்டதுக்கு, ‘ஊர்ல குட்டி பசங்களுக்கு எல்லாம் லீவு கொடுத்திருக்காங்க. அம்மா-அப்பாக்களுக்கு எல்லாம் வேலை வச்சிருக்காங்க. பசங்கள பாத்துக்க ஆளே இல்ல. அதான் ‘கொரோனா குட்டி கேர் சென்டர்’னு ஆரம்பிச்சு மூணு பசங்கள கவனிக்கலாம்னு இருக்கேன். இங்க இருந்து போகும்போதே சானிட்டைஸர் எல்லாம் வாங்கிட்டு போகணும்’ அப்டீன்னு சொல்லிட்டு, ‘குமாரு, இந்த ஷாப்பிங் மால் கூட எல்லாமே மூடிட்டாங்களாமே’னு சந்தேகமா கேட்டாரு. ஆமா அண்ணான்னு சொன்னா, ‘மது கடையில எல்லாம் இன்கிரிமென்ட் கொடுத்து வேலைக்கு வர சொல்றாங்க. குடிமகன்களுக்கு கொரோனா வரக்கூடாதுன்னு சானிட்டைஸர் யூஸ் பண்ணப் போறாங்க. மதுக்கடையில கொரோனா வராதுன்னா, மத்த இடத்திலையும் வராது தானே’ன்னு கேக்குறாரு. அதுக்கு ஆமான்னும் சொல்லாம, இல்லன்னு சொல்லாம ஒரு குழப்பமான ‘ம்ம்ம்’ சொல்லி அவர ரொம்ப குழப்பி விட்டு வந்தேன். நீங்க அப்டேட் படிங்க. நான் வீட்டுக்குப் போறேன்.

**நாகராஜ சோழன் MA. MLA**

கடன் வாங்கி, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

அவங்க எல்லாம் வெளி நாட்டில் குஜாலா இருக்காங்க ஜி!

**இதயவன்**

கொரோனா வைரஸ் என்னை தாக்காது…சுவாமி நித்தியானந்தர்

எப்படி கெரானா வைரஸ்க்கு கைலாசா நாட்டு விசா தர மறுத்து விடுவீங்களா ?

**சரவணன். ℳ**

இந்த ஆட்சியில் சாதி மத பேதமின்றி எல்லோருக்கும் சமமாக கிடைப்பது கொரோனா வைரஸ் காய்ச்சலாக தான் இருக்கும் போல.

**amudu**

நம் தட்டில் “மலை” போல் குவித்து வைக்கப்பட்ட சாப்பாடு, ஒருவருக்கு “கடுகு” போல் தெரிந்தால், அவருக்கு அம்மா என்று பெயர்.

**மயக்குநன்**

நாம் உழைப்பவர்கள், நமக்கு கொரோனா வராது!- எடப்பாடி

விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானியா இருப்பார் போலிருக்கே..?!

**இசை ரசிகன்**

இளையராஜாவுடன் சம காலங்களில் பயணித்து காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு அற்புதமான பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன், ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

“கண்ணுக்குள் நூறு நிலவா”, “புத்தம் புது ஓலை வரும்” – வேதம் புதிது, “பொங்கியதே காதல் வெள்ளம்” , “இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்”- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன் 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை. இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக எஸ்.பி.பி மற்றும் சித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் “தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க” பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன்-நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. இவரது முதல் படமான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் “சின்னத் தங்கம்”, “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே” தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவையே என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான “காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு” பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான ‘சிந்து நதி பூவின்’ “மத்தாளம் கொட்டுதடி மனசு” இன்றும் கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் . கோபுர தீபம் படத்தின் ‘உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

“உன்னை தொட்ட தென்றல் இன்று” என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி. அமராவதியில் “தாஜ்மஹால் தேவையில்லை” , “புத்தம் புது மலரே”, “உடலென்ன உயிரென்ன” என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து, ‘யாருப்பா இந்த இசையமைப்பாளர்’ என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்த வைத்து அத்தோடு காணாமல் போனவர்தான். பல வருடங்களுக்கு முன்பு ‘மெர்குரிப் பூக்கள்’ படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்-ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாய் இசையமைத்தவர். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் ‘ஆவாரம் பூவு’, ‘ஓடுகிற தண்ணியிலே’ பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் ‘செண்பகப் பூவைப் பார்த்து’ பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

‘என்ன அழகு எத்தனை அழகு’, ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்’ என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி , ‘மலரே ஒரு வார்த்தை பேசு’ , ‘சின்ன வெண்ணிலவே’ என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா. “அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கி “முந்தானைச் சேலை முட்டுதா ஆளை” என்று அரிச்சந்திராவோடு காணாமல் போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி ‘மின்னல் ஒரு கோடி’ பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் ‘அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது’ பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்தியாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ‘ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்’(மனசுக்குள் மத்தாப்பு), ‘சின்னப் பூவே மெல்ல பேசு’ (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு “லாலாலா” போட்ட “எஸ்.ஏ.ராஜ்குமார்” மற்றொருவர் அன்னை வயல் மூலம் “மல்லிகை பூவழகில்” என்று நல்ல பாடலோடு ஆரம்பித்து “செவ்வந்தி பூவெடுத்தேன்” என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம்.

‘ஏதோ நடக்கிறது’ , ‘தோடிராகம் பாடவா’, ‘மல்லிகைப் பூ பூத்திருக்கு’ போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை (மேகமே மேகமே), பெண்மணி அவள் கண்மணி(மூங்கிலிலை காடுகளே), சம்சாரம் அது மின்சாரம்(சம்சாரம் அது மின்சாரம் ,ஜானகி தேவி) என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே, ஊமை விழிகள், உரிமை கீதம் (மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்), வெளிச்சம்(துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே) போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தவர்கள்.

அழகன், வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி (கீரவாணி), கொடிபறக்குது, கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(பாடி அழைத்தேன், ஏழிசை கீதமே) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம் (அன்பே ஒரு ஆசை கீதம்) படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மளையாளத்தின் முன்னணி இசையமைப்பாளர்கள். தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன், எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. தேவா, ஷியாம், ஆதித்தியன் போன்றவர்கள் இன்னும் லிஸ்டில் இருக்கிறார்கள். இவர்களுடனே பயணித்து எப்படி இளையராஜா மட்டும் இன்று வரை தொடர்ந்து இசையில் சாதித்துக்கொண்டிருக்கிறார்.? ஆச்சிரியம்!!!

அது தான் ராஜா, இளையராஜா – யாருக்கும் இளைக்காத ராஜா .

**ஜோக்கர்**

முரணிலும் முரண் என்பது,

“வதந்திகளை நம்பாதீர்கள்” ன்னு வாட்ஸப் க்ரூப்பின் பெயர் இருப்பதே..!!!

**போக்குவரத்து தொழிலாளி**

பள்ளிகள் மூடப்பட்டன. அலுவலகங்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. பயத்தில் மக்கள். ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளவும், பார்த்துக் கொள்ளவும்

அச்சப்படும் மக்கள். ஆனால் எங்கள் அலுவலகங்கள் திறந்திருக்கிறது.

நாங்கள் பயணிகளோடு இன்றும் தொடர்பில் இருக்கிறோம். பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பேருந்துகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்கிறோம். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். பயணிகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் எது இருந்தாலும் நாங்கள் அவர்களை புறக்கணிப்பதில்லை. கூட்ட நெரிசலிலும் நாங்கள் தயங்காமல் எங்களின் பணியை (சேவை ) சிறப்பாய் ,

பெருமையோடு செய்து வருகிறோம். மக்களுக்குச் சேவையாற்றும் போக்குவரத்து தொழிலாளி என்பதில் பெருமை கொள்கிறோம்.

**எனக்கொரு டவுட்டு ⁉**

அஞ்சு ரூபா பேஸ் மாஸ்கை இருபது ரூபாய்க்கு விற்பவர்களுக்கே முதலில் வர வேண்டும் கொரானோ..!

**மயக்குநன்**

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பாஜக ‘பிரதான’ கட்சியாக அமரும்!- எல்.முருகன்.

அதுக்கு, மொதல்ல இங்கே ‘பிரமாதமான’ கட்சியா மாறணுமே..?!

**மெத்த வீட்டான்**

போலியாக இருந்தாலும் புன்னகைக்கு மதிப்பு உண்டு !

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *