நடிப்புக்கு சவால் விடும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் உதயநிதி. சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான ‘சைக்கோ’ மிகப்பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
உதயநிதி நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ படம் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. அடுத்தடுத்தப் படங்களாக இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இதில், அருண் ராஜா காமராஜ் இயக்க இருப்பது, பாலிவுட்டில் வெளியான ‘ஆர்ட்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் 2019ல் வெளியான படம் ஆர்டிகிள் 15. சாதிய ஒடுக்குமுறைகளை, சமூகம் சார்ந்த சாதிய அவலங்களைப் பேசிய படம். திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி பரபரக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்திவருகிறார் . தேர்தலை முடித்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
முதல்கட்டமாக, படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் நடிகர்களை உறுதிசெய்யும் பணிகளில் இருக்கிறார் அருண்ராஜா காமராஜ். இந்நிலையில், படத்தில் முக்கிய ரோலில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ். வி.சேகர் நடிக்க இருக்கிறாராம்.
சாதியப் பிரச்னையை, நடப்பு அரசியல் தலைவர்களை சாடியிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க எஸ். வி.சேகர் ஒப்புக் கொண்டதே திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒரு கண்டிஷனும் போட்டிருக்கிறார் எஸ். வி.சேகர். என்னவென்றால், இவர் வரும் காட்சிகளில் மட்டும் நடப்பு அரசினையும், மோடியையும் விமர்சிக்கக் கூடாது என்பதாம். இதற்கு படக்குழு ஒப்புக் கொண்டுதான் , அவரை நடிக்க உறுதி செய்திருக்கிறார்கள். அதோடு, படம் முழுக்க வரும் கேரக்டராகவும் அவரின் ரோல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
– தீரன்
�,”