சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கில் வெளியிடப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்குத் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியிலிருந்ததாகக் கூறப்படுகிறது.
திரைத் துறையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினரான சூர்யா, ஜோதிகா, கார்த்தி என அனைவரும் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் நிலையில், அவர்களது குடும்பத்தினரின் படங்களை திரையிடப்போவதில்லை என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், நேற்று தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளைத் திறக்க தயாராக இருப்பதாகக் கூறிய அவர் “ஓடிடியில் வெளியாகும் படங்கள் தோல்வியடைகிறது. அண்மையில் அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியான படங்கள் தோல்வியடைந்தன. திரையரங்கில் பார்க்கும் போது ரசிகர்களுக்குக் கிடைக்கும் ஒரு அனுபவம், ஓடிடி தளத்தில் கிடைப்பதில்லை. இதன்மூலம் திரையரங்கில் தான் படம் பார்க்க மக்கள் விரும்புகின்றனர் என்பது தெரியவருகிறது” என்று கூறியுள்ளார்.
**-கவிபிரியா**�,