இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஜூன் 9) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும் இஷான் கிஷனும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கெய்க்வாட் 23 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களும் ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும் அதிரடியாக குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியஸ் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக டி காக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டூ சென், டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இந்த ஜோடியில் அதிகபட்சமாக வாண்டர் டூ சென் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 19.1 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதற்கு முன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி சேஸ் செய்த மிக பெரிய இலக்கு 208 ரன்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2007ஆம் ஆண்டு இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேஸ் செய்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அந்த சாதனையை முறியடித்து (212 ரன்கள்) புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் தொடர்ந்து 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்திருக்கும்.
**-ராஜ்**
.