இரண்டாவது டி20: நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

entertainment

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் ஒரு ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கிஷன் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. கேப்டன் பண்ட் 5 ரன்களிலும், பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்க அணியில் ஹெண்டிரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியஸ் நான்கு ரன்களும் வாண்டர் டூ சென் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா – கால்சென் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இந்த ஜோடியில் பவுமா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கால்சென் 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 18.2 ஒவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் டேவிட் மில்லர் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *