டி20 போட்டி: இந்திய அணியின் தொடர் வெற்றி!

entertainment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் நேற்று (பிப்ரவரி 26) இரவு நடந்தது. 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை விளாசினர். அணியின் ஸ்கோர் 67ஆக இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் குணதிலகா (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, அசலங்கா 2 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கமில் மிஷாரா (1 ரன்) மற்றும் சண்டிமால்(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர்.
இப்படி இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 47 ரன்கள் (19 பந்துகள், 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு பக்கபலமாக நின்ற தொடக்க வீரர் நிசங்கா 75 ரன்கள் (53 பந்துகள், 11 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐந்து பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார். அதன்படி, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் 1 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யரும், சஞ்சு சாம்சனும், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் பொறுமை காட்டினாலும், பின்னர் அதிரடி காட்டி 3 சிக்சர்களை பறக்கவிட்டார். அவர் 39 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜடேஜா அதிரடியுடன் 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய ஸ்ரேயஸ் அய்யர் 44 பந்துகளில் 4 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் இந்திய அணி 17.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்ற மைதானமான தரம்சாலாவிலேயே இன்று (பிப்ரவரி 27) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய மறுநாளே ஓய்வின்றி களம் இறங்க வேண்டியிருப்பதாலும், தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதாலும் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றியைச் சுவைத்துள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடந்து அதிக வெற்றிகளைக் குவித்த அணிகளான ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய நாடுகளின் சாதனையை (தொடர்ச்சியாக தலா 12 வெற்றி) இந்தியா சமன் செய்யும்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0