சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். வில்லனாக வினய் நடிக்கிறார்.
மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், புதிய இயக்குநர் ஒருவரையும் டிக் செய்துவைத்திருக்கிறார் சூர்யா.
சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். ஒரு அழகான மாலை வேளையில் தேநீருடன் நடந்த சந்திப்பில் கதையொன்றை சூர்யாவுக்குச் சொல்லியிருக்கிறார் வசந்தபாலன்.
பீரியாடிக் கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கதையைக் கேட்டதும் செம குஷியாகிவிட்டாராம் சூர்யா. எப்படியும் எதிர்காலத்தில் வசந்தபாலனுடன் கைகோப்பார் என்றே சொல்லப்படுகிறது.
சூர்யாவின் பட லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் ஹரி. ஆனால், ஹரி – சூர்யா கூட்டணி எப்படியும் டேக் ஆஃப் ஆகாது என்பது உறுதி. இருவருக்குமே கதை குறித்தக் கருத்து வேறுபாடு இருப்பதால், இப்போதைக்கு ஹரி இல்லை. ஆக, அந்த இடத்தை வசந்தபாலன் பிடிப்பார் என்றே தெரிகிறது.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதோடு, மாஸ்டரில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க இருக்கிறார் வசந்தபாலன்.
ஆதினி