‘ஜெய் பீம்’ திரைப்பட உண்மை கதையின் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் வைப்புநிதிக்கான காசோலையை வழங்கினார்.
ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளைச் சந்தித்த நடிகர் சூர்யா, தனது சார்பில் ரூ.10 லட்சம், 2டி படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ரூ.5 லட்சம் ஆகியவற்றுக்கான நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்களை வழங்கினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்துக்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
நடிகர் சூர்யா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “ஜெய் பீம் திரைப்படத்தைத் தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் ஞானவேல் இந்தத் திரைப்படத்தைத் திறம்பட இயக்கி உள்ளார். அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும்போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய் பீம் படம் எடுத்து சென்றுள்ளது.
தற்போது வறுமையால் வாடும் பார்வதிக்கு, பொருளாதார உதவி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொண்டோம். அதை ஏற்று தற்போது 15 லட்ச ரூபாய் வைப்புநிதி வழங்கி, அதற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்புநிதி வழங்கப்பட்டுள்ளது. வைப்புநிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் பாராட்டியது மட்டுமல்லாமல் இருளர் சமூக மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே அவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்ட உள்ளதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
**-இராமானுஜம்**
.�,