‘சூர்யா 40’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் படக்குழுவின் திட்டம் இதுதான்!

Published On:

| By Balaji

சூர்யாவின் 38வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று வெளியானது. இந்தப் படம் கொடுத்த பெரிய வரவேற்பால், சூர்யாவின் அடுத்தடுத்தப் படங்களின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சூர்யாவின் 39வது படத்தை TJ ஞானவேல் இயக்கிவருகிறார். அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கியவர். இந்தப்படத்தில் வக்கீலாக நடித்திருக்கிறார் சூர்யா. சொல்லப் போனால், படத்தில் நாயகனாக மணிகண்டன் நடித்திருக்கிறார். கர்ணன் படத்தில் நடித்த ரஜிஷா விஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா வருகிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த ரிலீஸாக எதிர்பார்க்கலாம்.

தற்பொழுது, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் சூர்யா. இது, சூர்யாவின் 40வது படம். நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். கிராமப் பின்புலம் கொண்ட ஆக்‌ஷன் கதையாக படம் உருவாகிவருகிறது. இந்த மாதம் 12ஆம் தேதி படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்க இருக்கிறது. முன்னதாக, படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்பதால் கொரோனா தடுப்பூசியை கடந்த மாதம் 23ஆம் தேதியே போட்டுக் கொண்டார் சூர்யா.

சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்துவரும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துவருகிறது. விஜய் பிறந்த தினத்தில் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது போல, சூர்யாவின் பிறந்த தினத்தில் ‘சூர்யா 40’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

கூடுதலாக, சூர்யா ரசிகர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸூம் காத்திருக்கிறதாம். சூர்யாவின் கேரக்டரை சொல்லும் glimpse வீடியோ வெளியாகவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான பணிகள் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறதாம். சூர்யாவின் பிறந்த தினமான ஜூலை 23ஆம் தேதி சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

**- ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share