சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தைக் கொடுத்த சூர்யாவின் அடுத்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார்.
சூர்யாவின் 40-வது படத்தின், 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எப்படியும், வருகிற ஜூலை இரண்டாம் வாரத்தில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது போன்ற இரண்டு புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. கையில் கத்தியும், துப்பாக்கியும் வைத்திருப்பதிலிருந்து படத்தில் ஆக்ஷன் இருப்பது தெளிவானது. புது தகவல் என்னவென்றால், பொள்ளாச்சி சம்பவத்தை `சூர்யா 40` படத்தில் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கதைப்படி, பெண் ஒருவருக்காக களத்தில் போராடுகிறாராம் சூர்யா. திரைக்கதை அழுத்தமாக இருக்க வேண்டுமென்பதால், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கதைக்குள் இணைத்திருப்பதாக ஒரு தகவல்.
கமர்ஷியல் படங்களே கொடுத்தாலும், சமூகத்திற்கான நல்ல கருத்துகளும் படத்தில் இருக்க வேண்டுமென விரும்புவார் சூர்யா. பாண்டிராஜ் கதை சொல்லும் போது, உண்மை சம்பவங்களும் படத்தில் இடம்பெறுவதால் கூட படத்தில் நடிக்க உடனே சம்மதம் கூறியிருக்கலாம் என்கிறார்கள்.
கிராமம் சார்ந்த குடும்பக் கதையாக இருந்தாலும், படத்தில் அழுத்தமான கருத்தொன்றும் இருப்பதாக படத்தில் பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள்.
சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையில் படம் உருவாகி வருகிறது. ஜூலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்த தினத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விஜய்க்கு பீஸ்ட் பட டைட்டில் அறிவித்தது போல, சூர்யா பிறந்த தினத்துக்கும் ஸ்பெஷல் போஸ்டரை திட்டமிட்டிருக்காம் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ்.
சூர்யா 40 படத்தை முடித்த கையோடு தாணு இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
**- ஆதினி**
�,