மூன்று நடிகர்கள் வெளியிட்ட பார்டர் டிரெய்லர்!

entertainment

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண் விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகலாம். இந்த நிலையில் ‘அருண் விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மாற்றங்கள் ஏற்பட்டு, 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பல புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. ரசிகர்களும், பார்வையாளர்களும் திரையரங்கத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் எதிர்வரும் மாதங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் பார்டர். ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் பார்டர் திரைப்படமும் இணைந்திருக்கிறது

அருண் விஜய் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து இருக்கிறார் என்கிறது இயக்குநர் வட்டாரம். டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக – ஜோடியாக நடித்திருக்கிறார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். பிரபல நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பார்டர்’ படத்தின் மூலம் இயக்குநர் அறிவழகன் மீண்டும் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்கிறார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தை, 11:11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் வெளியிடுகிறார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பார்டர் படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து நேற்று மாலை வெளியிட்டனர்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *