‘சிம்புவை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள்’ என்று கூறி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘நடிகர் சிம்பு, படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை’, ‘சிம்புவால் நாங்கள் பெரும் நஷ்டம் அடைந்தோம்’, ‘சிம்புவின் விருப்பப்படி தான் ஷூட்டிங் ஸ்பாட் கூட தேர்வு செய்யப்படும்’ என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளும், செய்திகளும் நடிகர் சிம்புவைக் குறித்து சிறிதுகாலம் முன்பு வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்க முடியாத விதத்தில் அந்த செய்திகளில் உண்மையும் இருந்தது. சிம்பு நடிக்கவிருப்பதாக இருந்த திரைப்படங்கள் கைவிடப்பட்டதும், நீண்ட காலமாக அவரது நடிப்பில் படங்கள் வெளிவராததுமே அதன் உண்மையை உணர்த்துவதாகவும் இருந்தது.
சினிமாவில் இருந்து சிம்பு சற்று விலகி இருந்த காலத்தில் அதிகம் வெளிவராத அத்தகைய தகவல்கள், ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்கியதும் மீண்டும் செய்திகளில் இடம்பெறத் துவங்கியுள்ளது. சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு மாநாடு படத்தில் நடித்துவரும் நிலையில், ‘படப்பிடிப்பிற்கு அவர் தாமதமாக வருகிறார்’ என்றும், ‘ஹைதராபாத்தில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தார்’ எனவும் சில செய்திகள் வெளிவந்தது. அந்த நேரத்தில் முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ரசிகர்களும் மறுகேள்வி கேட்காமல் அதனை நம்பிவிட்டனர்.
**வெறுப்பை உமிழும் பத்திரிகைகள்**
ஆனால் அத்தகைய செய்திகளால் சிம்பு மட்டுமல்லாமல் அவரை நம்பி படமெடுக்கும் படக்குழுவினரும் எந்த அளவு பாதிப்படைகிறார்கள் என்பதைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கை உணர்த்துகிறது. “அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை. மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்துவைக்கும் செய்திகளைக் கூட நான் ஒளித்து வைப்பதில்லை. அழைத்துக் கேட்டால் ஆமா, இல்லை என்பதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். அதனால் என் படத்திற்கு சாதகமான விஷயங்களே நடந்திருக்கின்றன.
பெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும். அப்படியான யாரோ ஒரு இன்ஃப்ளூயண்ஸ்ட் பெர்ஸன் நம் மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார். ஒரு பத்திரிகை ‘சிம்பு படப்பிடிப்பிற்கு 16-ஆவது நாளிலிருந்து தாமதமாக வருகிறார்’ என்ற செய்தியை வெளியிடுகிறது. என்ன ஒரு அபத்தம். அந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள்தான் நடந்து முடிந்திருந்தது.” என்ற சுரேஷ் காமாட்சியின் வார்த்தைகள் தனது கதாநாயகன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், திரைத்துறையில் நிலவிவரும் போட்டி குறித்தும் விளக்குவதாக உள்ளது.
**சிம்பு இரண்டு கேரவன் கேட்கிறாரா?**
“ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவேனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவேன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள். இன்னொரு பத்திரிகை சிம்பு ஹைதராபாத்துக்கு வர மறுத்துவிட்டார் என்று ஒரு செய்தியைப் போடுகிறார்கள். நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில் தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது.. அப்போ சிம்பு இல்லாமலா ஷூட்டிங் எடுக்கப் போகிறோம்? இதெல்லாம் சின்ன செய்திதானே? கடந்து போங்கள் என சொல்லலாம். நாங்கள் சொந்தக் காசை வைத்து படம் பண்ணலை. வட்டிக்கு வாங்கி பண்றோம்.” என்று சுரேஷ் காமாட்சி தனது வலியை விளக்கும் போது, முந்தைய படங்களில் சிம்பு செய்த தவறுகளும் தான் சுட்டிக் காட்டப்படுகிறது.
**சினிமாவை நேசிக்கும் சிம்பு**
மேலும் “ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கும். வேக வேகமான இயக்குநர்… & டீம், காட்சிகளைப் புரிந்து நேரமெடுக்காமல் நேர்த்தியாக நடிக்கும் நடிகர்கள் என அருமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குழு திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் *கண்ட்ரோல் ஆல் டெலிட்* பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே.” என்று சிம்புவின் கடந்தகால வாழ்க்கையும், அவரது செயல்பாடுகளும் எத்தகைய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்குகிறது.
சிம்பு மாறிவிட்டார் என்பதைப் பலமுறை அழுத்தமாகக் கூறி, “யாரையோ திருப்திபடுத்த முறையற்ற செய்திகள் வெளியிட வேண்டாம் என அன்போடு என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எதுவாக இருந்தாலும் எனக்கு அழையுங்கள். சரியானத் தகவல் தருகிறேன். அல்லது என் பத்திரிகை தொடர்பாளரிடம் கேளுங்கள். உங்களால் உயர்த்திவிடப்பட்ட ஒரு தயாரிப்பாளராகவே வலம் வர ஆசைப்படுகிறேன். கைகொடுத்து நில்லுங்கள். நன்றியோடு எப்போதும் இருப்பேன்.” என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.
**-இரா.பி. சுமி கிருஷ்ணா**�,