aதியேட்டரில் வெளியான சூரரைப் போற்று!

Published On:

| By admin

நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, முதன்முறையாக மதுரையில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுதா கொங்காரா இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த சூரரைப் போற்று திரைப்படம் கடந்த 2020 நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. அனைவராலும் பாராட்டப்பட்ட இந்தப் படம் பல்வேறு விருதுகளையும் வென்றது. ஆனாலும், இந்தப் படத்தை திரையரங்கத்தில் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள பழைமையான மிட்லண்ட் சினிமாஸில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
மிட்லண்ட் சினிமாஸில் வெளியாகும் தகவலை சில நாட்களுக்கு முன் அறிந்த சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் ஆன்லைனிலும் நேரிலும் வந்து டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியாவது வழக்கம். தங்களுக்குப் பிடித்த கதாநாயகன் படம் வெளியானால், அந்தத் திரையரங்குகளில் தோரணம், பிரமாண்டமான கட் அவுட்கள் வைத்து கொண்டாட்ட மனநிலையுடன் படங்களைப் பார்ப்பது சினிமா ரசிகர்களின் பழக்கம். அதே போன்று பிப்ரவரி 4 அன்று மதுரை மிட்லண்ட் சினிமாஸ் வாசலில் சூர்யா ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகமாகக் குவிந்தார்கள். சூர்யா பேனருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள்.
படத்தைத் திரையில் கண்டவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியும், பாடல்களுக்கு எழுந்து நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து திரையரங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, “என்னதான் ஓடிடி வழியாக டிவியில் படம் பார்த்தாலும், திரையரங்கில் பார்க்கும் அனுபவமே தனிதான். அதிலும் ரசிகர்களுக்கு தங்கள் ஹீரோவை பெரிய திரையில் பார்க்கும் உற்சாகம் தனியானது. அந்த வகையில் ஓடிடியில் வந்து பலராலும் பார்க்கப்பட்டிருந்தாலும் எங்கள் திரையரங்கில் படம் வெளியாவது தெரிந்து ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. திரையரங்கில் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இருக்கும் வரை திரையரங்கத் தொழிலுக்கு அழிவில்லை” என்றார்.
“கொரோனா காரணமாக தியேட்டருக்கு படம் பார்க்க வர தயங்குகின்றனர் என கடந்த இரண்டு வருடங்களாகக் கூறப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் பிரபலமான கதாநாயகன் நடித்த படங்கள் திரையரங்கில் வெளியாகிறபோது இயல்பான கூட்டம் கூடுகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்ட அரங்கில் கூடிய ரசிகர்கள் கூட்டம்” என்கிறார் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் சண்முகம்.
இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற திரையரங்கில் வெளியாகி இருக்க வேண்டும் என்பதால் படத்தை தியேட்டரில் எந்தவித நிபந்தனையும் இன்றி வெளியிட சூர்யா தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் திரையிட்டதால் சூர்யா குடும்ப உறுப்பினர்கள் நடித்த படங்களை திரையரங்கில் வெளியிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருந்தது. அதனால் சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் வெளியிட அப்போது முடியவில்லை. மதுரை மிட்லண்ட் சினிமாஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து புதிய படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட்டு வந்தனர். அதே போன்று சூரரைப் போற்று படத்தை நேரடியாக தயாரிப்பாளர் மூலம் திரையிட ஏற்பாடுகள் நடந்தபோது படத்தை திரையிடக் கூடாது என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடப்பட்டது. அதனை எல்லாம் புறக்கணித்தே சூரரைப் போற்று படத்தை மிட்லண்ட் சினிமாஸ் நிர்வாகம் திரையிட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் புதிய, பழைய படங்களை அத்திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்யக் கூடாது என முதல்கட்டமாக விநியோகஸ்தர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share