காலமாற்றத்திற்கு ,தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு முன்னணி இயக்குநர்கள் வரிசையில் எப்போதும் தன்னை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி.
கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படங்களை மட்டுமே இயக்கிவரும் இயக்குநர். முழு நீள காமெடி படங்கள் என்றாலும் சரி, ஹாரர் படங்கள் என்றாலும் சரி, இவருடைய அனைத்து படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் தியேட்டருக்கு அழைத்து வரக் கூடிய பொழுது போக்கு அம்சங்களுடன்தான் அமைந்திருக்கும்
அந்த வகையில் கடைசியாக வெளியான ‘அரண்மனை-3’ படத்திற்கு பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காபி வித் காதல்’.நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள். அவர்களுக்குள் ஒத்துப் போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன்… அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை பயணிக்கும் என்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
1996 ஆம் ஆண்டுசுந்தர்.சி இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘உள்ளத்தை அள்ளித் தா’ திரைப்படம், ஊட்டியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இந்த படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் நடப்பது போலவே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன மீண்டும் ஒரு உள்ளத்தை அள்ளித் தா போன்ற கலகலப்பான காதலும், காமெடியும் கலந்த படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
**-அம்பலவாணன்**