தேர்தல் நேரத்தில் சாதுர்யமாகத் திட்டமிட்ட ‘சுல்தான்’ தயாரிப்பாளர்!

Published On:

| By Balaji

கார்த்தி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘சுல்தான்’. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘ரெமோ’ படத்தின் இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கெனவே டீஸர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, விவேக் – மெர்வின் இசையில் அனிருத் குரலில் ‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’ பாடலும் சிம்பு குரலில் ’யாரையும் இவ்வளவு அழகா’ பாடல்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில், கார்த்தியின் சுல்தான் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. பொதுவாக, தேர்தல் நேரத்தில் வெளியாகும் படங்களுக்கு நடக்கும் சிக்கல் ஒன்றிருக்கிறது.

ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் தயாரிப்பாளர் மினிமம் கியாரண்டி அடிப்படையில் ஒவ்வொரு ஏரியாவில் இருக்கும் விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்பனை செய்ய வேண்டும். விநியோகஸ்தர்கள் திரையரங்குக்குப் படத்தை கொடுப்பார்கள். இதுதான் நடைமுறை. விநியோகஸ்தர்கள் பொதுவாக தொகையை கையில் பணமாகக் கொடுப்பார்கள். சில கணக்கில் வராத பணமாகக்கூட இருக்கும். அதோடு, தேர்தல் காரணமாகப் பறக்கும் படை அதிக ஆதிக்கம் செலுத்தும். ஆக, நேரடியாகப் பணப்புழக்கம் செய்வது சிரமம்.

இப்படியான சூழலில் எப்படி சுல்தான் சுதந்திரமாக வெளியாகிறது என்று விசாரித்தால், தயாரிப்பாளார் எஸ்.ஆர்.பிரபு கெட்டிக்காரத்தனமாக ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார். சுல்தான் படத்தைத் தமிழகமெங்கும் நேரடியாக அவரே ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். அதனால், படத்தை ரிலீஸ் செய்து சில வாரங்களுக்குப் பிறகே ஒவ்வொரு திரையரங்கிலிருந்தும் கணக்கு பார்க்கப்பட்டு தயாரிப்புத் தரப்புக்கு பணம் வந்துசேரும். அதனால், தேர்தல் வரை எந்த பணச் சிக்கலும் இருக்காது. படமும் சிரமமின்றி வெளியாகும்.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share