சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டான்’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதியபடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 15,2022 அன்று வெளியானது.
ரங்கூன் படத்தை இயக்கியவரும், நண்பருமான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும்
அப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ்ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் கதாநாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும்படமாக தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பொழுதுபோக்கு படங்களை தரும் கதாநாயகனாகவே ரசிக்கப்பட்டு வருகிறார். ரஜினிமுருகன், வருத்தப் படாத வாலிபர் சங்கம், டாக்டர் என வெற்றிப்படங்களில் நடித்து வணிகரீதியாக உயர்ந்திருந்தாலும் ஆக்ஷன் ஹீரோ எனும் அந்தஸ்து சிவகார்த்திகேயனுக்கு இன்று வரை கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்றுவரை கதாநாயகர்களுக்கு ஆக்க்ஷன் படம் என்பது அவர்களது விருப்ப படமாக இருந்து வருகிறது.
அதனை நிறைவு செய்யும் வகையில் தன் நண்பர் சிவகார்த்திகேயனுக்காக ராஜ்குமார் பெரியசாமி கதையை உருவாக்கியிருக்கிறாராம். இந்தக்கதையில் தொடக்கத்திலிருந்தே சண்டைக்கார நாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதுவரை சிவகார்த்திகேயன் சண்டை போட்டால் நம்பமாட்டார்கள் என்பதை உடைக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்கிறது இயக்குநர் வட்டார தகவல்.
சமகால கதாநாயகர்களில் விஜய்க்கு துப்பாக்கி, அஜித்குமாருக்கு பில்லா
படம் அமைந்தது போல் சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**- அம்பலவாணன்**