கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தநிலையில், தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளதாக மருத்துவத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், வடிவேலு, சத்யாராஜ், விஷ்ணு விஷால், மம்முட்டி, துல்கர் சல்மான், ஜெயராம், மகேஷ் பாபு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் கொரோனா பொது முடக்கத்தின்போது சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தடுப்பூசி போடுவதற்கு அவரது சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அதற்கென ஆக்சிஜன் வங்கியை ஏற்படுத்தி தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தவர் சிரஞ்சீவி.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னெச்சரிக்கையாக இருந்தும் லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-இராமானுஜம்**
�,