கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள், அதே போன்று சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றிபெற்றுவிட்டால் அதிலும் விஸ்வரூப வெற்றி என்றால் சினிமா உலகமும், ஊடகங்களும் அந்தப் படத்தின் பின்னால் அணி வகுக்க தொடங்கி பயணிப்பார்கள்.
ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் படத்தின் வசூல் கணக்கு வெளியான பின்பு படைப்பு பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு வணிக வெற்றி முன் நிலைபடுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
விக்ரம் வெளிவருவதற்கு முன்பு படத்தை திறம்பட புரமோஷன் செய்த தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் படத்தின் வெற்றி உறுதியான பின்பு இனி எதற்கு புரமோஷன் என்று அடுத்தபட வேலைகளில் முழ்கி விடவில்லை. விக்ரம் படத்தை புரமோஷன் செய்வதற்கான வாய்ப்பு எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவரே ஆஜராகிவிடுகிறார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம் கமல்ஹாசன் முன்னணி நடிகர்களுடன் ஈகோ பார்க்காமல் இணைந்து நடித்தது என்பது பிரதான காரணம். அதனால்தான் குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை கொண்ட கமல்ஹாசன் நடித்த விக்ரம் இன்றைக்கு அனைத்து தரப்பு சினிமா ரசிகனும் விரும்பி பார்க்கும் படமாக மாறியிருக்கிறது.
தென்னிந்திய மொழி சினிமா இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் ஆதிக்கத்தில் உள்ளது. மூத்த நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களை வெற்றி பெற வைக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. தமிழ், தெலுங்கு,மலையாள மொழி திரையுலகில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, போன்ற மூத்த நடிகர்கள் நடித்த படங்கள் வெகுஜன வெற்றியை பெற போராட வேண்டிய நிலையில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் வெற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதனை வெளிப்படுத்தி கமல்ஹாசனுக்கு விருந்தளித்து கொண்டாடி, கௌரவித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
விக்ரம் படம் இதுவரையிலும் உலகம் முழுவதும் 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வியந்து கமல்ஹாசனை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கவுரவித்துள்ளார். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அதில் கலந்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த இந்தி நடிகர் சல்மான்கானும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இது குறித்து சிரஞ்சீவி, “எனது அன்பான பழைய நண்பர் கமல்ஹாசனை அழைத்து, நேற்று இரவு எனது வீட்டில் கவுரவித்து கொண்டாடுவதில் முழு மகிழ்ச்சி. ‘விக்ரம்’ படத்தின் அற்புதமான வெற்றிக்காக எனது நெருங்கிய நண்பர் சல்லு பாய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் உடன்… என்ன ஒரு தீவிரமான, த்ரில்லான படம் இது. எனது நண்பா, உனக்கு மேலும் சக்தி கிடைக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
**- இராமானுஜம்**