பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள்!
பின்னணி பாடகியான சின்மயி மற்றும் ராகுல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 2014ம் வருடம் ராகுலை திருமணம் செய்தார் சின்மயி. திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை இவர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
பெண், ஆண் என பிறந்துள்ள இரட்டை குழந்தைகளுக்கு த்ரிப்டா மற்றும் ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர். இவர்கள் தான் இனிமேல் தங்களின் உலகம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு நாட்கள் தான் கர்ப்பமாக உள்ள செய்தியை பகிர்ந்து கொள்ளாதது பற்றி ரசிகர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு சின்மயி பதிலளித்துள்ளார்.
‘நான் கர்ப்பமாக இருந்தது பற்றி இவ்வளவு நாட்கள் சொல்லாததால் நான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டேனா என கேட்பவர்களுக்கும் என்னுடைய அன்பு. என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே இந்த செய்தி தெரியும். என்னுடைய குடும்பம், நண்பர்கள், என் தனிப்பட்ட விஷயம் எதையும் பொது வெளியில் இதுவரை பெரிதாக பகிர்ந்தது இல்லை. இனிமேலும் அப்படி தான். என் குழந்தைகள் புகைப்படங்களும் வெளி வராது. என் அறுவை சிகிச்சையின் போது பஜனை பாடினேனா என்றெல்லாம் கேட்கிறீர்கள். அதை பற்றி எல்லாம் பின்பு சொல்கிறேன். இப்போதைக்கு இந்த தகவல்கள் போதும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பாடல்கள் மற்றும் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் சின்மயி. மேலும், நிகழ்ச்சி தொகுப்பாளர், பிசினஸ் வுமன் என பன்முகம் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**