என்னை பார்த்துக் கொள்ளுங்கள்: கண்கலங்கிய சிம்பு

Published On:

| By Balaji

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை

வி. ஹவுஸ் புரொடெக்க்ஷன்ஸ் சார்பில் சுரேஷ்காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை (நவம்பர் 18) ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் சிலம்பரசன் பேசும்போது, உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

அவர் பேசுகையில், “ ‘என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. சுற்றி நிறைய பிரச்சினை செய்கிறார்கள். ஆனால், அப்படியான சூழலை எல்லாம் கடந்து தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொன்னேன். அதேபோல எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

யுவன் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அனைவரும் சொன்னது போல எனக்கென்றால் பயங்கரமாக இசையமைத்துவிடுவார். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிக் கொள்வார். அவரிடம் உங்கள் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கொடுங்கள். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வேன். இந்தப் படத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்துச் செய்துள்ளேன். நிறையபிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா , ”இந்தப் படக்குழு எனக்கு நான்காவது தலைமுறை. சில சமயங்களில் இவர்களைப் பார்க்கும்போது எனக்கு பயம் வருகிறது. நாங்களும்தான் படங்கள் எடுத்தோம். ஆனால், இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அழகாக இருக்கிறது. சிம்பு இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார். எல்லாரும் சொல்வார்கள் சிம்புவைப் பற்றி. அவருடைய சில சேஷ்டைகள் எனக்குப் பிடிக்கும். அந்த சேஷ்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை.

சிம்புவுடன் ஒரு படம் நடித்தேன். அவர் ஒரு அற்புதமான குழந்தை. வெளியில் சொல்வதெல்லாம் சும்மா. அவர் மிகவும் அன்பான பையன். அவரோடு பணிபுரியும்போது நானும் அவரும் ஒன்று என்றே நினைத்துக்கொள்வேன்.

இளையராஜா வீட்டுப் பிள்ளைகள், கங்கை அமரன் வீட்டுப் பிள்ளைகள், என் மகன் எல்லோரும் ஒன்று சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் உங்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சுப்பு பஞ்சுவின் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். பஞ்சு அண்ணனை இப்போது நினைத்தாலும் மனம் உருகிவிடும். இதையெல்லாம் பார்க்க அவர் இன்று இல்லை. நான், எஸ்.ஏ.சி எல்லாம் இவர்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “ ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து இந்தப் படத்தை நாம் எடுப்போம் என்று சொன்னபோது இவ்வளவு பெரிய படத்தை என்னால் சுமக்க முடியுமா என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இது உங்களால் முடியும் என்று சிம்பு என்னை ஊக்கப்படுத்தினார்.

ஆனால், எனக்கு பயமாகவே இருந்தது. ஆனாலும் சிம்பு என் மீது வைத்த நம்பிக்கைக்காக நான் இதில் இறங்கினேன். இளையராஜாவுக்கு எப்படி ‘காதலுக்கு மரியாதை’ ஒரு கம்பேக்காக இருந்ததோ அதே போல இந்தப் படம் யுவனுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும். சிம்பு படம் என்றாலே யுவன் மிகவும் ரசித்து இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு மற்ற இரு ஹீரோக்கள் என்றால் அது யுவனும், எடிட்டர் பிரவீனும்தான். சிம்பு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாரா என்று நிறைய பேர் என்னிடம் போன் செய்து கேட்பார்கள். அப்படி எனக்கு அவரால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றிவிட்டேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், “இன்று திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இரண்டே இரண்டு பேர் தான் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள். ஒருவர் கமல்.. இன்னொருவர் சிம்பு… அந்த அளவு சினிமா பற்றியே நினைக்க கூடிய ஒருவர் தான் சிம்பு.. இந்தப்படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க.. ஆமா பிரச்சனை பண்றார்.. சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு.. அதான் பிரச்சனைன்னு சொன்னேன்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சுமைதாங்கி அப்படின்னா, வெங்கட் பிரபு இயக்குனர்களில் எம்.எஸ்.தோனின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா பிரச்சனைகளையும் கூலாக கையாளுவார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது. எனக்கு இன்றைக்கே ரிலீஸ் தேதியாக இருக்க கூடாதா என ஏக்கமாக இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “நாங்கள் பணக்காரன் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னபையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, வாங்க நாமளும் பார்த்துட்டு வரலாம் என கூறினார். அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க. பின்னாடி பெரிய ஆளா வருவான் என அப்போதே கணித்து பாராட்டினார். நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், “இந்தப்படத்தின் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் மேற்பார்வை பொறுப்பை சுரேஷ் காமாட்சி சில நாட்கள் என்னிடம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒய்வு எடுக்கும்போது நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்து தூங்குவதை பார்த்து, சிம்பு தனது நாற்காலியை கொடுத்து என்னை வசதியாக தூங்க வழி செய்து கொடுத்தார். பெரியவர்களை மதிக்கும் குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா, “எல்லோருக்கும் பிடித்தவர் நடிகர் சிம்பு.. பிடிக்காது என்று சொல்வதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு ரசிகனாக நான் சொல்வதெல்லாம், நீங்க எப்ப வேணா வாங்க, எப்படி வேணா வாங்க,.. ஆனா அடிக்கடி வாங்க.. அதேமாதிரி இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவை நவீன நம்பியார் என இனிமேல் சொல்லலாம். எப்படி நம்பியார் இல்லாமல் படங்களே இல்லை என முன்பு ஒரு நிலை இருந்ததோ அதேபோன்ற ஒரு காலகட்டத்தை எஸ்ஜே.சூர்யா இப்போது கொண்டுவந்து விட்டார்” என்றார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன்.. அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ்.. எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் என்னன்னா அவர் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்.. அவர் பிரச்சனைகள்ல சிக்கி கஷ்டப்பட்டா நானும் கஷ்டப்படுவேன். இப்ப அவர் நல்லா இருக்கார்.. நானும் நல்ல இருக்கேன்..

சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு.. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்துக்கு எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டார்..

ஒரே நேரத்துல பத்து படம் பண்ணுனா எவ்வளவு கவனம் இருக்குமோ அதை இந்த ஒரே படத்துல வெங்கட் பிரபு செஞ்சிருக்கார். அந்த அளவுக்கு பவர்புல்லான ஸ்கிரிப்ட் இது. இனி அடுத்து அவர் படம் பண்ணுனா அது பான் இந்தியா படமா தான் டைரக்ட் பண்ணனும்.

இந்தப்படம் டப்பிங் பண்ணும்போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசியே எனக்கு கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் வந்துச்சு. போதாக்குறைக்கு நானே தெலுங்குல டப்பிங் பேசுறேன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன்.. டப்பிங் முடிச்சுட்டு படத்தை பார்த்தப்ப தான் தோணுச்சு.. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்கு தான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்.

யுவனோட பின்னணி இசை பத்தி சொல்லனும்னா என்னோட பொம்மை படத்திற்கு அவர் மியூசிக் போட்டிருந்ததை பார்த்துட்டு கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்ன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.. வாசுகி பாஸ்கர் கூட ஒரு தடவ சொல்லும்போது, மங்காத்தா படத்துல யுவன் அற்புதமான தீம் மியூசிக் போட்டிருந்தாலும், அதையே பல இடங்கள்ல காபி பேஸ்ட் பண்ணிட்டார். ஆனா இந்த மாநாடு படத்துல ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனி ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கார் அப்படின்னு சொன்னாங்க.. அப்படி ஒரு கலைஞனா அவரை விதவிதமா பண்ற அளவுக்கு இந்தப்படம் ஈர்த்திருக்கு. ” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “நானும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து பிரியாணி படம் பண்ணிய சமயத்துலே இந்த கதையை அவர் என்னிடம் சொல்லிருக்கார்.. சொல்லப்போனா இந்தப்படத்தோட கதையில இருந்து கிளைக்கதையா தான் பிரியாணி உருவானது. சிம்பு சார் இந்தப்படத்துல நான் வந்துட்டேனு ஒரு வசனம் பேசுறார். அவர் இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்.. வெற்றி மட்டும் அவருக்கு ரிப்பீட் ஆகிட்டே இருக்கட்டும்” என்றார்.

யுவன் சங்கர் ராஜா , “வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே இதற்கு எப்படி இசையமைக்க போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது. காரணம் டைம் லூப்பில் திரும்ப திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது. இதில் நீங்க வழக்கமாக பார்க்கும் சிம்புவை பார்க்க முடியாது.” என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு, “நான் சென்னை-28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு. இந்தப்படத்தோட ஒன்லைன் மட்டும் தான் சிம்புகிட்ட சொன்னேன். ஆனால் அதுல வர்ற ஹீரோவோட அப்துல் காலிக் அப்படிங்கிற பேரு அவருக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. என் படத்துக்கு யுவன் ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவார்னு சொன்னாங்க.. ஆனா சிம்பு படத்துக்கு தான் யுவன் ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவாரு” என்றார்.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share