u‘அடுத்தது புதுப்பேட்டை-2 தான்’: செல்வராகவன்

Published On:

| By Balaji

தான் அடுத்ததாக புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாகவும், அதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் என்றும் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி எனத் தனது வித்தியாசமான படைப்புகளால் பெரும் ரசிகர்களைப் பெற்றவர் இயக்குநர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரிலீஸ் நேரங்களில் வசூல் சாதனை புரியவில்லை என்றாலும், காலங்கள் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அதே போன்று செல்வராகவன் தனது சகோதரர் தனுஷுடன் இணைந்து மீண்டும் எப்போது திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. 2008-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி 12 வருடங்கள் கடந்த நிலையிலும் புதுப்பேட்டை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போன்று படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.

செல்வராகவன் கலந்துகொள்ளும் அத்தனை விழா, நிகழ்ச்சிகளிலும் அவர் எதிர்கொள்ளும் முக்கியக் கேள்வியாக ‘புதுப்பேட்டை 2 எப்போது எடுக்கப்போகிறீர்கள்’ என்பது இருந்தது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 6) கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவன், தான் அடுத்து புதுப்பேட்டை 2 படத்தை இயக்கப்போவதை உறுதிபடுத்தியுள்ளார்.

So most most expected part 2 movie in Tamil cinema #Pudhupettai is Confirmed as @selvaraghavan sirs next. pic.twitter.com/vFzrO3rz7b

— R Vasanth (@rvasanth92) March 6, 2020

அவர் மேடையில் உரையாற்றும்போது, “அடுத்து என்ன படம் பண்ண போறீங்கன்னு எல்லாரும் என்கிட்ட கேக்குறாங்க. சரி உங்களுக்காக சொல்கிறேன். என்னோட ரசிகர்களுக்காகவும், நான் இன்ஜினியரிங் படிச்ச காலேஜ் என்பதாலயும் சொல்றேன். நான் பண்ணப்போற அடுத்த படத்தில தனுஷ்தான் ஹீரோ. சரி, என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்னு நாங்க யோசிக்கும்போது புதுப்பேட்டை 2 பண்ணிடலாம்னு முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share