ஹீரோவாக நடித்ததை விட, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிறகுதான் செம பிஸியாகிவிட்டார் சத்யராஜ். குறிப்பாக, பாகுபலியில் கட்டப்பாவாக நடித்ததற்கு பிறகு, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும்’சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடந்துவருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் சத்யராஜ். ஒரு மாதத்துக்கும் மேல் இங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. சூர்யா படத்துக்குப் பிறகான சத்யராஜின் திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2018ல் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த படம் பதாய் ஹோ. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கையில் எடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழில் திரைப்படத்தை என்.ஜே. சரவணன் இயக்கவுள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜி இணை இயக்குனராகவும் பணியாற்ற இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது.
ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் தந்தை ரோலில் சத்யராஜ் நடிக்க பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருந்தது. அது, உறுதியாகிவிட்டது. சூர்யா படத்தை முடித்தக் கையோடு, ஆர்ஜே பாலாஜியின் படத்தில் நடிக்க இருக்கிறார் சத்யராஜ்.
படத்தின் கதை சுவாரஸ்யமானது. திருமண வயதில் வீட்டில் மகன் இருக்கும் போது, வீட்டில் அம்மா கர்ப்பமாகிவிடுகிறார். அதனால், வீட்டில் நடக்கும் சம்பவங்களே ஒன்லைன். இந்தப் படத்தில் அப்பா ரோலில் சத்யராஜூம், அம்மாவாக ஊர்வசியும் நடிக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் படம் துவங்க இருக்கிறது. நிச்சயமாக, சத்யராஜ் நடிக்கும் ரோல் செம ரகளையாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த ரோலுக்கு கச்சிதமான பொருத்தம் இவரே.
இந்தப் படத்தை முடித்த கையோடு, தெலுங்கு படமொன்றுக்குச் செல்கிறார் சத்யராஜ். புதியப் படத்துக்காக இவரை கமிட் செய்ய சென்றால், இந்த வருடத்துக்கான கால்ஷீட் முழுமையாகிவிட்டது. தேதி இல்லையென்கிறார்களாம் சத்யராஜ் தரப்பினர்.
**-தீரன்**
�,