ரோஷ் குமார் M360 ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில் மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். ‘தொரட்டி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளைச் செய்கிறார். சண்டைப் பயிற்சியை விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர். இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தை எழுதி, இயக்குகிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் பேசும்போது, “இந்தக் கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்தக் கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்துக்குச் சரியான நபராக எனக்குத் தோன்றியது சரத்குமார்தான். இயக்குநருக்கும் சரத்குமார்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்தக் கதையை கேட்டவுடன், ஆர்வமாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தக் கதையில் மண்ணின் மகளாக, மீனாட்சி எனும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில், சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.
இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்தக் கதையை மிக நேர்த்தியாகவும், இதுவரை மக்களுக்கு சொல்லப்படாத விஷயத்தைச் சொல்லும்விதமாகவும் அமைத்துள்ளார். இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது” என்றார் திருமலை பாலுச்சாமி.
**-இராமானுஜம்**
�,