பாகுபலி எனும் பிரமாண்டப் படைப்பைக் கொடுத்த இயக்குநர் ராஜமெளலி. பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் அதில் நடித்திருந்தனர்.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குநராக உயர்ந்தார் ராஜமெளலி. இவரின் அடுத்தப் படைப்பு ‘ஆர்.ஆர்.ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கொம்மாரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு… இந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களுடைய வாழ்க்கையும் பேர்லல் லைஃப் மாதிரி ஒரே கதைக்குள் படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். நிஜத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அவர்கள் இருவரும் சந்தித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற புனைவே ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஒன்லைன்.
இந்தப் படத்தை தெலுங்கு மட்டுமின்றி, இந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான முடிக்க வேண்டிய பணிகள் எக்கச்சக்கமாக இருக்கிறதாம். படப்பிடிப்பு முடிந்தாலும் கிராஃபிக்ஸ் பணிகள் உட்பட இதர பணிகளுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் எடுக்கும் என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்தப் படத்துக்கான விநியோக உரிமை, படத்திற்கான விற்பனைகளை படக்குழு மேற்கொண்டுவருகிறது. அந்த காரணத்தால், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதைப் படக்குழு வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வதாகத் தகவல்.
அக்டோபரில் படம் வெளியாகவில்லையென்றால், படத்துக்கான முதலீடு செய்ய வரும் விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்கள் தயக்கம் காட்டுவார்கள். படத்துக்கான பணம் வராவிட்டால், அது படத்தின் பணியை பாதிக்கும். இதனால், அக்டோபர் இல்லையென்பதை சொல்லாமல் தவிர்க்கிறார்களாம்.
**- தீரன்**
�,