நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், ‛‛மைந்தன், கோலங்கள் உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மாசிலாமணி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், ‛‛தென்னவன், சபரி, சலீம், வீரம், என்னை அறிந்தால், ஈட்டி, மிருதன், ஆண்டவன் கட்டளை, கவண், விஸ்வாசம், காப்பான், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தொற்று சரியான நிலையில் மாரடைப்பால் இன்று(நவம்பர் 17) அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தலைமைக் கழகச் சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ எம்.பி.யின் சகோதரர் ஆர்.என்.ஆர். மனோகர் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். நடிகராகவும், இயக்குநராகவும் அறியப்பட்ட மனோகரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
�,”