rராஜவம்சம், தள்ளிப் போகாதே ரிலீசாகாதது ஏன்?

Published On:

| By Balaji

அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டு அரண்மனை 3 ,ராஜவம்சம் ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன.

ஆனால், இன்று அரண்மனை -3 மட்டுமே வெளியாகிறது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே ஆகிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன. புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது

இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது, திரையரங்குகள் குறைவாகக் கிடைத்ததுதான் காரணம் என்றார்கள். குறிப்பாக ‘டாக்டர்’ திரைப்படம் தமிழ்நாட்டில் 720 திரைகளில் வெளியிடப்பட்டது. இவற்றில் 400 திரைகளில் இரண்டாவது வாரமும் இப்படம் தொடருகின்ற அளவிற்கு வசூல் குறைவில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. அதனால் எஞ்சியுள்ள 600 திரைகள் மட்டுமே புதிய படங்களுக்குக் கிடைக்கும்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் ‘அரண்மனை-3’ படம் சுமார் 500 திரைகளில் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்கள் போக, ஹாலிவுட் படமான ‘வெனம்’ வெளியாகிறது. அந்தப் படத்திற்கு வழக்கமாக ஆங்கிலப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் கிடைக்கும்.

இந்த மூன்று படங்களைக் கடந்து ராஜவம்சம், தள்ளிப்போகாதே படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் மூன்றாவது முறையாக இந்த படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share