nநடிகர்களைத் தீர்மானிப்பது எது?: ராஜமெளலி

Published On:

| By Balaji

இந்தியத் திரையுலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் பிரமாண்ட படைப்பாக லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் டிவிவி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தானய்யா ஆகியோர் ஆர்ஆர்ஆர் படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்தியத் திரைத் துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பாக உள்ளது ரத்தம் ரணம் ரௌத்திரம் திரைப்படம்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இந்தி சினிமாவின் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ஜனவரி 7ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகிறது.

நேற்று முன்தினம் சென்னையில், இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கான முன்னோட்ட விழாவில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, லைகா புரொடக்‌ஷன் சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் என்.வி.பிரசாத், டிவிவி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட், “நான் என் திரைப்பயணத்தை இங்கு தமிழில்தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஆர்ஆர்ஆர் படத்தைக் காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்றுதான் இருந்தது. உங்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும். இந்திப் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர்தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும், இயக்குநரின் பார்வைதான் முக்கியம். நான் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இந்தப் படத்தில் என்னை மிக மிக ஆதரவாகப் பார்த்துக் கொண்டார்கள். இதில் நடித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

நடிகர் ராம்சரண் பேசுகையில், “இங்கு வந்து தமிழக ரசிகர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வர வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்தப் படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாகப் படைத்திருக்கிறார். அதைத் திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்தபோது சில காட்சிகளில் நடிக்கும்போது, என்டிஆர் ஃப்ரீயாக இருப்பார். அதைப் பார்த்தபோது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில்தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இந்தப் படத்தில் தமிழில் பேசியது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்” என்றார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், “உங்களுடன் கலந்துரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜமௌலி எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுவே எனக்கு பயத்தை தந்தது. ஒரு நடிகருக்கு இயக்குநர் நம்புவதைத் தருவது சவாலானது. அதை எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறோம். எனக்கும் ராம்சரணுக்கு தோன்றிய எண்ணம்தான் தோன்றியது. நான் கஷ்டப்பட்டு ஷூட்டிங் செய்யும்போது அவர் பேக்கப் பண்ணி போய்க்கொண்டிருப்பார். என்னை விட்டுட்டு போறியா… இரு நானும் வர்றேன் என்பேன். படம் முழுக்க வேலை பார்த்ததே, மிக புதிதான அனுபவமாக இருந்தது. பாகுபலி இந்தியா முழுவதையும் ஒன்றாக்கியது. எந்த நடிகரும் எந்த மொழியிலும் நடிக்கலாம். விஜய் சாரின் மாஸ்டர் படம் தெலுங்கில் மிகப் பெரிதாக வெற்றி பெற்றது. ஒருநாள் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படம் உருவாகும். அதில் நாங்கள் எல்லோரும் நடிக்கலாம். தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில்தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்குதான். தமிழுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மறுக்க முடியாதது. இந்தப் படத்தில் கார்க்கி, விஜய் மிகச்சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டுப் பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்” என்று கூறினார்.

இறுதியாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசுகையில், “நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரிதான் சென்னை எனக்கு. சினிமா கற்று தந்தது சென்னைதான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம். இறுதியில் ரசிகர்கள்தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும், கதைதான் நாயகனைத் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாகுபலி எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல, அதன் எமோஷன்தான். அதேபோல் ஆர்ஆர்ஆர் பாகுபலியைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும். ராம்சரண், என்டிஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தைத் தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது.

ஆனால், என் கதை அதை செய்திருக்கிறது. ராம்சரண், என்டிஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில்தான் முடிவு செய்தேன். இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது. வரலாற்றில் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்த நாயகர்கள், உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை, சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம். போஸ்ட் புரொடக்‌ஷன் மட்டும் ஒன்றரை வருடம் செய்திருக்கிறோம். நான் இந்தப் படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு அதை மாற்ற முடியாது. ஆனால் தமிழில் நடக்கும் கதையை இயக்கும்போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன். பாகுபலி மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை. ரசிகர்கள் மனதில் இருந்து பாகுபலியை மறக்கடிக்க முடியாது. பாகுபலியில் உள்ள எல்லாம் இதில் இருக்காது. ஆனால் அதில் இருந்த எமோஷன் இந்தப் படத்திலும் இருக்கும். ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்” என்று கூறினார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share