கர்ணன் படத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்!

Published On:

| By Balaji

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கர்ணன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்தத் திரைப்படம் கலவரச் சூழலை ஏற்படுத்துவதாகவும், காவல் துறையின் கண்ணியத்தைக் கெடுப்பதாகவும் அமைந்துள்ளது எனக் கூறி படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு செயலாளரும், திருநெல்வேலி மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையிடம் அளித்த புகார் மனுவில், “1991இல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்தப் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவரச் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல் நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல் துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக இந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டி வருகிற மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ திரைப்படமும் சாதிய வேற்றுமைகளைப் பற்றிய கருத்துகளை ஆழமாகப் பேசியது. இரு திரைப்படங்களும் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்ட நிலையில், இந்தக் கூட்டணியில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share