மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு மொத்த டீமும் தயாராக இருக்கிறது. திரைப்படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதால், கிளைமேக்ஸ் காட்சியை படமாக்க நெய்வேலிக்குச் செல்கிறது படக்குழு. நெய்வேலியில் அமைந்துள்ள பல்வேறு சுரங்கங்களில் ஒன்றில் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் வேறு சில காட்சிகளைப் படமாக்க முடிவெடுத்திருக்கிறது படக்குழு.
மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்பாட்டுக்குச் சென்றபிறகு மாற்றங்கள் செய்வதை விரும்பாதவர். ஷூட்டிங்குக்கு முந்தய டெஸ்ட் ஷூட்டிலேயே அனைத்துத் தேவைகளையும் கச்சிதமாக முடிவெடுத்துவிட்டு ஸ்பாட்டில் மிக வேகமாக ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார். அதனால் தான் மாஸ்டர் திரைப்படத்தை இத்தனை வேகமாக எடுத்து முடிக்க முடிந்தது என்கின்றனர் படக்குழுவினர்.
டெஸ்ட் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோவை தான் மூன்றாவது போஸ்டராக ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு. சுரங்கத்தில் நடைபெறும் சண்டையின்போது, விஜய்-விஜய் சேதுபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகளை தனித்தனியே டெஸ்ட் ஷூட் எடுத்து எப்படிப்பட்ட காட்சிகளை படமாக்கலாம் என ஸ்டண்ட் மாஸ்டருடன் கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கிறார் லோகேஷ். எனவே, அதில் சிறப்பாக வந்த காட்சிகளின் ஃபோட்டோவை போஸ்டராக மாற்றி ரிலீஸ் செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது மாஸ்டர் படக்குழு.
அடுத்ததாக, விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனனின் ஃபோட்டோ இடம்பெற்றுள்ள போஸ்டரை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருக்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் வரவிருக்கும் காதலர் தினத்தன்று இந்த போஸ்டர் ரிலீஸ் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்.
�,