‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரியக் கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.
பயணிகள் கவனிக்கவும் பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்பட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
” எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், ‘ஆஹா ஒரிஜினல்’ படைப்பாக வெளியாகிறது.
‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய புத்தகம் ஒன்று வெளியானதாகத் தகவல் இணையதளங்களில் பரவியது. இது தொடர்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வர் சூர்யா பாலகுமாரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இது எங்களின் கவனத்திற்கு வந்தது. மேலும் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் மூவரும் சூர்யா பாலகுமாரன் இல்லத்திற்குச் சென்றோம். அதனையடுத்து படத்தின் கதைக்கும், பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும், படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயணிகள் கவனிக்கவும் என்பதைப் பயன்படுத்தி இருப்பதாகவும் விளக்கமளித்தோம். எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாலகுமாரன் குடும்பத்தினர், நன்றி என்ற அறிவிப்பில் பாலகுமாரன் அவர்களது பெயரை வெளியிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறோம். மேலும் இவ்விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாத பொருளாகப் பேசப்பட்டு வந்த ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படத் தலைப்பு குறித்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக மறைந்த எழுத்தாளரும், சினிமா வசனகர்த்தாவுமான பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா பாலகுமாரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில், “
அப்பா பாலகுமாரன் எழுதிய “பயணிகள் கவனிக்கவும்” என்கிற நாவல் மிகவும் புகழ் பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்து, அன்று முதல் இன்று வரை 10க்கும் மேற்பட்ட பதிப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு உன்னதமான படைப்பு.
சில நாட்களுக்கு முன்பு அதே பெயரில் ஒரு திரைப்படத்தின் பெயர் போஸ்டராக வெளிவந்ததைக் கண்டு நானும் எங்களது குடும்பத்தாரும் கவலைக்குள்ளானோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குநரோ, மக்கள் தொடர்பாளரோ எங்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கவோ, அனுமதி கேட்கவோ இல்லை. இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு எங்கள் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான விஜயன் சுப்ரமண்யம் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம். இதை தங்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டும் என்பது என்னுடைய மற்றும் என் குடும்பத்தாருடைய விருப்பம்” என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பாலகுமாரன் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
.**-இராமானுஜம்**
.