நெஞ்சுக்கு நீதி – போலீஸாக நடிக்க பயம்: உதயநிதி

entertainment

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும் ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.
இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா கடந்த மே 9 இரவு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பேசுகையில், “நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்தப் படத்தில் வேலை பார்த்தது பெருமை. படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளைக் கொடுத்துள்ளார். அதற்கு நன்றி. இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் பல விஷயங்களைப் பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த அருண்ராஜாவுக்கு நன்றி. தயாரிப்பாளர் போனிகபூர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. ஆயிரம் பொறுப்புகள் இருந்தாலும் உதயநிதி கூலாக இருக்கிறார். படத்தின் பேக்ரவுண்ட் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. பாடல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடன இயக்குநர் லீலாவதி கூறுகையில், “இது எனது முதல் படம். புது நடன இயக்குநருக்கு வாய்ப்பளிப்பது பெரிய விஷயம். உதயநிதி அவர்களுக்கு நன்றி. அவருடன் பல படங்கள் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருக்கிறேன். காவல் உடையில் பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார். அவர் அருகில் போவதற்கே ஒரு தயக்கம் இருந்தது. படத்தில் ஒரு கூத்து கலை வருகிறது. தமிழகத்தின் கூத்து கலைஞர்களைப் படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அவர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் ஒரு கூட்டு முயற்சி. படத்துக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “இந்தப் படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம். இந்தியில் வெளியான ‘ஆர்டிகள் 15’ படத்தின் ரீமேக். அது அனைவரும் சமம் என்ற சட்ட பிரிவு, இது அம்பேத்கர் எழுதிய சட்டம். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பல பாடல்களை எழுதியுள்ளார். என்னை அவர் கூப்பிட்டது எனக்கு ஆச்சரியம். இந்தி படத்தில் இருக்கும் அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு. அதற்காக பல மாற்றங்களை செய்துள்ளனர், அதற்காகவே இந்தப் படத்தை பார்க்க வேண்டும். படத்தில் நாட்டுப்புறப் பாடல் ஒன்று வருகிறது. அதற்காக பெரும் உழைப்பைப் போட்டுள்ளனர். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகை ஷிவானி ராஜசேகர் கூறுகையில், “எல்லோருக்கும் வணக்கம். ஆர்ட்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறார்கள் என்றவுடன், நானே விருப்பபட்டு கேட்டு வாய்ப்பு வாங்கினேன். தயாரிப்பாளர் ராகுலுக்கு நன்றி. உதயநிதி சார் எல்லோரையும் மரியாதையுடன் நடத்துவார். மொத்த குழுவுக்கும் நன்றி. நான் மிஸ் இந்தியா போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிடுகிறேன். உங்களது ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
இயக்குநர் மகிழ்திருமேனி பேசுகையில், “ஆர்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறேன் என உதய் சார் சொன்னபோது, அது சரியான தேர்வு என்று நான் நினைத்தேன். அது ஆழமான அரசியல் பேசக்கூடிய படம். உதய் சார் பணிவான நபர், தன்னை அடுத்தவர் இடத்தில் வைத்து பார்ப்பவர். மிக இயல்பாக இந்தக் கதாபாத்திரத்தில் இவர் பொருந்துவார். அருண் இயக்கப் போகிறார் என்றவுடன் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. வசனங்கள் ஆழமாக இருந்தது. நடுநிலை என்பது உண்மையின் பக்கம் நிற்பது, வசனகர்த்தா தமிழரசனுக்கு தலை வணங்குகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசுகையில், “இந்தப் படம் சரியான தேர்வு, இயக்குநருடைய முதல் படம், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர் இந்த ரீமேக்கை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளது. படத்தின் மொத்த பேருக்கும் வாழ்த்துகள். உதயநிதி படங்கள் யதார்த்தமான ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் காவலாளி ரோலைச் சிறப்பாக செய்துள்ளார். படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.
தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், “நான் ஆர்டிகள் 15 படத்தை அதிக முறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை அவர் படத்தில் பதிவு செய்துள்ளார். ராகுலுக்கு நன்றி கூற வேண்டும். மொத்த குழுவுக்கும் பெரிய நன்றி” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “உதயநிதி சார் பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப ரத்தத்திலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி சார் தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிட்டிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்ஃபுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம். ஆனால், அருண்ராஜா இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி சார்தான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு, அவர் தந்ததுதான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சி செய்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது, இந்தப் படத்துக்கு யாரை இயக்குநராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்டபோது, அருண் ஒப்புக்கொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க எனக் கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்தப் படத்தின் வெற்றி சமர்ப்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்துக்கு செல்வார். நடன இயக்குநர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் ஒப்புக்கொண்டபோது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல் வரிகள் பவர்ஃபுல்லாக இருக்கும். சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *