கேரள சர்வதேச திரைப்பட விழாவில் ‘மறுபக்கம்’!

entertainment

கேரளாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழா, வரும் மார்ச் 18 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதன் தொடக்க விழாவை வரும் மார்ச் 18ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கத்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

இதில் ஆப்கானிஸ்தான், கொரியா, ஈரான், ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய சினிமா, வெளிநாட்டு சினிமா என்று 7 பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.

போட்டிப் பிரிவில் மொத்தம் 14 படங்கள் கலந்து கொள்கின்றன. 25ஆம் தேதி நடைபெறும் இறுதி விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த வருடம் முதல் தற்போது வரை மறைந்த திரையுலக ஆளுமைகளுக்கு உரிய முறையில் அஞ்சலியும் செலுத்தப்பட இருக்கிறது.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் மறைந்த பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தமிழ் திரைப்படமான மறுபக்கம் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

அவரது மலையாளப் படங்கள் பற்றி கேரள ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் அவர் இயக்கிய தேசிய விருதுகள் பெற்ற மறுபக்கம் படத்தை பற்றி இங்குள்ள ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படம் திரையிடப்பட இருக்கிறது என விழாக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவக்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். ராதா மற்றும் ஜெயபாரதி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது.

மேலும் இந்த விழாவில் மறுபக்கம் படம் திரையிடப்படும்போது நடிகர் கமல்ஹாசனுக்கும் அதில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும் என்றும் விழாக்குழுவினர் கூறியுள்ளனர். கமல் நடித்த நம்மவர் படத்தை கே.எஸ்.சேதுமாதவன்தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0