�
தமிழ் சினிமாவில் ஓர் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வடிவேலு கூறினார். ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்துக்கு ‘நாய் சேகர்’ என்ற பெயரைப் பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்துக்கு வைக்க முடியாது எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போன்று ‘நாய் சேகர்’ தலைப்பு எங்களுக்கே எனும் அடிப்படையில் சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் போஸ்டரை நேற்று (16.09.2021) மாலை ‘நாய் சேகர்’ தலைப்பிட்டு, ஒரு நாயுடன் சதீஷ் இருப்பது போன்ற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
சிவகார்த்திகேயன் இந்த போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு, “வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் நாய் சேகர் தலைப்பு சதீஷ் நடிக்கும் படத்துக்குத்தான் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் வடிவேலு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அநேகமாக நாய் சேகர் என்ற பெயருடன் ‘மீண்டும் நாய் சேகர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ போன்ற வார்த்தைகள் இணைக்கப்பட்டு வடிவேலு படத்தின் தலைப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
**-இராமானுஜம்**
�,