கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறப்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது. அப்படியே திறந்தாலும் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் இருக்கும். இந்தச் சிக்கலையெல்லாம் தாண்டி ரிலீஸாகும் படம் கல்லா கட்டுமா, ரசிகர்கள் திரையரங்குகள் வருவார்களா என்பது சந்தேகமே.
எதற்கு வம்பென, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் ஓடிடி-யின் உதவியை நாடி வருகின்றனர். லாக் டவுன் காலக்கட்டத்தில் பல படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. பல நாட்களாக கிடப்பில் கிடக்கும் படங்களையும் ஓடிடி-யில் தள்ளிவிட திட்டமிடுகிறார்கள்.
அப்படி, நீண்ட நாட்களாக வெளியாக முடியாமல் இருக்கும் படத்துக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. `துருவங்கள் பதினாறு` படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு இளம் நம்பிக்கை இயக்குநர் கார்த்திக் நரேன்.
துருவங்கள் பதினாறு தொடர்ந்து இரண்டாவது இயக்கிய படம் `நரகாசூரன்`. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் டீஸர் கூட வெளியாகி எதிர்பார்ப்பைத் தூண்டியது. ஆனால், பல்வேறு சிக்கல்களால் வெளியாக முடியாமல் இருந்தது.
இந்தப் படம் ரிலீஸாகாமல் போனதால், அடுத்தப் படத்தைத் துவங்கினார். அதுதான், அருண்விஜய் நடித்து வெளியான `மாபியா சேப்டர் 1`. தற்பொழுது, நரகாசூரன் படத்தை ஓடிடி ரீலீஸ் குறித்த பேச்சுவார்த்தை உறுதியாகியிருக்கிறது.
புதிய படங்களை தொடர்ச்சியாக ப்ரீமியர் செய்துவரும் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிக்க `டி-43` படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷூக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இப்படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
**-ஆதினி**
�,