இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள உளவியல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன். அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருள் ஆகும் எனக் கூறுகிறார் படத்தின் இயக்குநர்.
இப்படத்தின் இசை விழா சென்னையில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் நிகழ்வினை செய்துகாட்டினார். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் பாலசரவணன், “கூர்மன் தலைப்பே வித்தியாசமானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாசமாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக வித்தியாசமாக இருந்தது. இந்த டீமும் வித்தியாசமானவர்கள் தான். இந்தப்படத்தில் இயக்குநரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் முதல்முறையாக கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன். எங்களுடன் ஒரு நாயும் நடித்தது. அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்று கூறினார்.
நடிகர் முருகானந்தம் பேசுகையில், “கூர்மன் படத்தில் எனக்கு சின்ன கேரக்டர் தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனாலும் நடித்தேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் தான், மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். நண்பன் ராஜாஜி அவருடன் எங்கிட்ட மோதாதே படம் செய்துள்ளேன். இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் கத்தி எடுத்து குத்தப்போறாங்க என்பதையே, சத்தமே இல்லாமல் அமைதியாகச் சொல்வார். படத்தை அழகாக எடுத்துள்ளார் இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி” என்று கூறினார்.
நடிகர் ஆடுகளம் நரேன் பேசுகையில், “கூர்மன் பிஜு கதை சொன்னபோது அவனிடம் எப்ப வரனும்னு சொல்லு வர்றேன் என்று சொன்னேன், அவனை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய கஷ்டமாக இருந்தது. போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும், இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷுவலாக நடித்தார்கள், எல்லோருக்கும் வாழ்த்துகள். இது நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
எடிட்டர் தேவராஜ் பேசுகையில், “படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜூவுக்கு நன்றி. பிஜூவும் நானும் 12 வருட நண்பர்கள். மற்ற படத்திற்கும் இப்படத்திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே வைத்திருந்தார். படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நடிகர் பிரவீன் பேசுகையில், “இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. டிரிப் படத்திற்குப் பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. மதன் எப்போதோ சொன்னது, படம் செய்யும் போது என்னைக் கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இதில் இரண்டாவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம், கேட்டபோதே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன், என்னுடன் நடித்த அனைவரும் அருமையாக நடித்தார்கள். ராஜாஜி, பாலாசரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் மதன், இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி” என்றார்.
சூப்பர் குட் சுப்பிரமணி பேசுகையில், “சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம், அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் பெறும். அந்தப்படத்தில் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. அந்தப்படம் போல் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். பிஜூவை உதவி இயக்குநராகப் பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் உழைப்பு தெரியும். அவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பார் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசுகையில், “தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது. அவர் உதவியாளர்களிடம் கேட்டால் தான் தெரியும். நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது, அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜூவே எழுதி விட்டார். இந்தப்படத்தில் பாடலை கேட்டு, அவரது கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால், ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நடிகர் ராஜாஜி பேசுகையில், “நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment தயாரிப்பாளர் ‘தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ .நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது. அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜூ என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார். ஒண்ணுல்ல, இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார். படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு தரமான படமாக இருக்கும் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மிகச்சிறந்த படமாக இருக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார்.
இயக்குநர் பிரையன் பி. ஜார்ஜ் பேசுகையில், “ எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது. அதற்காக மதன் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை சிக்கல் இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. நாயகன் ராஜாஜி தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன். ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். உமா தேவி மேடம் அட்டகாசமாக பாடல் எழுதி தந்துள்ளார். அவருக்கு நன்றி. பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார். ஒரு நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நடிகை ஜனனி ஐயர் பேசுகையில், “பிரையன் பி. ஜார்ஜை தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும். ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம். அப்படியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும். படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி” என்றார்.
இப்படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட நடிகை ஜனனி ஐயர் உடன் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
**இராமானுஜம்**